Friday, September 3, 2010

கமல் 50

கமல் 50


பெரிதினும் பெரிது கேள்.


* யுகன்

ஐந்து வயதில் தேசிய விருதுடன் தன் திரை வாழ்வைத் தொடங்கிய கமல் ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர் உலக நாயகன் என்று போற்றப்படுகிறார். தயக்கத்துடன் தான் நடிக்கத் துவங்கினேன் என்று கூறும் கமல் இன்று மகத்தான நடிகராக விளங்குகிறார். திரையுலகின் பல்வேறு துறைகளில் தன் அடையாளத்தையும் தனக்கான இடத்தையும் தேடிக்கொண்டிருந்த அவருக்கு நடிப்பதில் இருந்த தயக்கத்தைப் போக்கி சரியான திசையில் திருப்பியவர் இயக்குநர் கே. பாலச்சந்தர்.

கமல் பதினாறு வயதிற்கு முன்னாலே ஒரு ஹீரோவாக நிலை பெற்றுவிட்டாலும் 16 வயதினிலே படம்தான் அவரின் நடிப்பின் மேதமையை வெளிக்காட்டுவதாய் அமைந்தது. அடுத்து சிகப்பு ரோஜாக்கள். இப்படங்களை நடித்து முடித்தபோது அவர் வயது 24. இந்த வயதில் இவ்வளவு அற்புதமாக நடித்தவர் இப்போது, 55 வயதில், நடிப்பில் பல சிகரங்கலை எட்டியிருக்க வேண்டுமல்லவா? உலகம் போற்றும் நடிகராக மாறியிருக்க வேண்டுமல்லவா? அதாவது அவர் ரசிகர்கள் அவரை அன்போடு அழைப்பதுபோல உண்மையிலேயே உலக நாயகனாக ஆகியிருக்க வேண்டுமல்லவா?

இன்று கமல் இந்திய அளவில் முக்கியமான நடிகராகக் கருதப்படுகிறார். இந்திய அளவில் நசீருத்தீன் ஷா, ஓம் பூரி, மம்மூட்டி, மோகன்லால் என்று எத்தனையோ திறமைசாலிகள் இருந்தாலும் பன்முக நடிப்பு - அதுவும் படத்தைத் தோளில் சுமக்கும் நாயக வேடங்களில் - என்று வரும்போது கமல் தன் சமகாலத்தவர்கள் பலரையும்விடச் சில அடிகளாவது முன்னால் நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அமிதாப் பச்சன், தர்மேந்திரா போன்ற நட்சத்திரங்கள் பன்முக நடிப்பில் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள் என்றாலும், மிகவும் வித்தியாசமான வேடங்கள், வேடங்களுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வது, எல்லா வகை நடிப்பிலும் காணப்படும் நுட்பமான வெளிப்பாடுகள் என்று பார்க்கும்போது கமலின் திறமை தனித்து நிற்கிறது.

ஆனால் இந்தத் திறமைகள் அவரிடமிருந்து மிகச் சிறந்த சினிமா அனுபவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். சிறந்த படங்கள், அசாத்தியமான பாத்திரங்கள் என்று அவரது எல்லைகளும் பங்களிப்பும் விரிவடைந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் நடக்கவில்லை? இதற்குக் காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் வணிகச் சூழல் அவரை நட்சத்திரமாக்கிவிட்டது. நட்சத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் புதிய பரிசோதனைகளை, தேடலை முடக்கிவிட்டது. ஆகவே அவரது திறமை முழுமையாக வெளிப்படாததிற்கு வணிகச் சூழல்தான் காரணம் என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது ஒரு முக்கியமான காரணம்தான். ஆனால் இது மட்டும்தான் கமல் என்னும் கலைஞனின் விகாசத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று சொல்லிவிட முடியுமா? பிற துறைகளில் சாதித்தவர்கள் எப்படிச் சாதித்தார்கள்? அவர்களுக்கு மட்டும் சூழலின் ஒத்துழைப்புக் கிடைத்துவிட்டதா?

செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாத நம் தேசத்திலிருந்து உலகம் போற்றும் ஒரு விஸ்வநாதன் ஆனந்த் உருவானது எப்படி? துப்பாக்கி சுடும் போட்டியில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் சூழல் இல்லாத ஒரு துறையில் அபின்வ் பிந்தரா சாதித்தது எப்படி? பண்டிட் ரவிஷங்கர், பிஸ்மில்லா கான் போன்றவர்கள் உலக அளவில் மதிக்கப்படும் கலைஞர்களாக உருவானது எப்படி? சத்யஜித் ராய் இறுதிவரை கலைஞராக வாழ்ந்துவிடவில்லையா? பதேர் பாஞ்சாலி படமெடுக்க அவர் பட்ட பாடு நாடறியும். அது தானே இந்தியாவில் உன்னதமான சினிமாவைத் தொடங்கிவைத்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் ஏன் ஒவ்வொரு படம் எடுக்கவும் இவ்வளவு பாடுபட வேண்டும்? ஹாலிவுட் சினிமாவில் மாட்டிக்கொண்டு நல்ல கதாபாத்திரங்களுக்காக ஏங்கி அலைந்தாரே இங்கிரிட் பெர்க்மென். ஒரு தொழிலதிபர் அவரிடம் நட்புக் கொள்ளக் கோடிக்கணக்கான் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்டுடியோவே வாங்கித் தருகிறேன் என்ற போது அதெல்லாம் எனக்கெதற்கு, எனக்குத் தேவை நல்ல இயக்குனரும் ஒரு நல்ல ஸ்கிரிப்டும்தான் என்று அவர் சொல்லவில்லையா?. “நல்ல படமெடுப்பதற்காக என் சம்பாத்தியம் அனைத்தையும் இழந்தேன். ஆனால் இன்று என் படங்கள் இல்லாத வீடியோ லைப்ரரியே இல்லையென்று விக்டோரியா டிசிகா பெருமைப்பட்டுக்கொள்லவில்லையா?

இந்தக் கேள்விகள் கமல் ஹாசனைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் எழுப்பப்படவில்லை. ஆனால் நட்சத்திரமாக ஜொலிப்பதற்காகக் கலைஞனாக வாழ முடியாமல்போனது துரதிருஷ்டவசமானது. கலைஞனாக வாழ்வதா, நட்சத்திரமாக வாழ்வதா என்பதைக் குறிப்பட்ட நபர்தான் முடிவு செய்ய வேண்டும். கலைஞனாக வாழ விரும்பினால காலத்திடம் அதற்கான விலையைத் தந்துதான் ஆக வேண்டும். புதுமைப்பித்தன் எந்த விலை தந்தாரோ அந்த விலையை. தாஸ்தாயெவ்ஸ்கி என்ன விலை தந்தாரோ அந்த விலையை. கலைஞனாக வாழ்வது அத்தனை எளிதன்று. அதுவும் தமிழ் சினிமாவில். தவிர, வெற்றியும் கலை உணர்வும் இசைந்துபோவது தமிழில் மட்டுமல்ல, எங்குமே கடினமான விஷயம்தான். இந்தப் பின்னணியில்தான் ஒருவரது இலக்கு என்ன என்பது குறித்த கேள்வி எழுகிறது.

உலக அளவில் சிறந்த நடிகனாக அறியப்பட வேண்டுமென்றால், சாதிக்க வேண்டுமென்றால், அதற்கு விலை கொடுத்தே ஆக வேண்டும். கமலை ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்று அழைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் உண்மையிலேயே இந்தப் பட்டங்களுக்குத் தகுதியானவராக ஆக வேண்டும் என்று அவர் நினைத்தால் தமிழகச் சூழலில் பெருவாரியான மக்களைக் கவர்ந்து வசூலைக் குவிக்கும் படங்களை மட்டும் நம்பியிருந்தால் போதாது. நம்மிடம் மகத்தான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். கதாசிரியர்கள் இருக்கிறார்கள். இயக்குநர்கள் இருக்கிறார்கள். நடிப்பதற்குக் கமல் இருக்கிறார். வேறு என்ன தேவை சர்வதேச விருதுகளை வெல்ல?

கான் விருது சிறந்த கலை முயற்சிகளுக்காகக் கொடுக்கப்படும் விருது. ஆஸ்கார் விருது என்பது வெகுஜனத் திரைப்படங்களுக்கானது. அது அமெரிக்கப் படங்களுக்கு அமெரிக்கர்களே கொடுத்துக்கொள்வது. ஆனால் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது பிரிவு ஒன்றிருக்கிறது. அதில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். அதில் குறைந்த பட்சம் 40 படங்களாவது மகத்தான படங்கள் என்று கூறிவிட முடியும் (பை சைக்கிள் தீவ்ஸ், ரஷோமான், லாஸ்ட்ரடா, ஃபர்பிடன் கேம்ஸ், தி வர்ஜீன் ஸ்பிரிங், நோ மேன்ஸ் லேண்ட் ஆகியவை சில உதாரணங்கள்). இந்தப் படங்களுக்குப் பக்கத்தில் வைத்துப் பேசக்கூடிய அசலான படம் எதிலேனும் கமல் இதுவரை நடித்திருக்கிறாரா? இவற்றோடு ஒப்பிடக்க்கூடிய படங்களை எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள் (உதாரணம் அடூர்). அவர்கள் படங்களில் கமல் நடிக்காமல் போனதற்குக் காரணம் என்ன?

நட்சத்திர அந்தஸ்துக்கேற்ற படங்களில் நடித்துக் கமல் பொருளும் புகழும் சம்பாதிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உலக நாயகன் என்று புகழப்படும் அவர் அந்தப் புகழ்ச்சிக்கு நியாயம் செய்யும் விதத்தில் அவ்வப்போது சில படங்களில் நடிக்கலாமே என்பதுதான் கமலிடம் அதிகமாக எதிர்பார்ப்பவர்களின் ஆதங்கம். திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கு என்றே கமல் நடிப்பில் ஏன் படம் தயாரிக்கப்படக் கூடாது? சர்வ தேசப் போட்டியில் போட்டியில் ஜாம்பவன்களோடு மோதி விருது வென்று வரும் வாய்ப்பு அவருக்கு ஏன் கிடைக்கக் கூடாது?

இதுபோன்ற படங்கள் இங்கே ஓடாது என்று சொல்லப்படுவதில் முழு உண்மை இல்லை. வங்காளத்தில் ராயின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் தியேட்டர்க்காரர்கள் படத்தைத் தூக்கிவிட்டார்கள். அது கான் விருது வென்ற பிறகு மீண்டும் அவர்களே திரையிட்டார்கள். படம் நூறு நாட்கள் தாண்டி ஓடியது.

இயக்குனர் மகேந்திரன் ஒரு முறை கூறியது போன்று உலக சினிமா எடுப்பது ஒன்றும் சீனப் பெருஞ்சுவர் கட்டுவதுபோலக் கடினமான காரியம் இல்லை. ‘தி வே ஹோம்’ என்னும் கொரியப் படத்தில் பேரன் பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் தருவது போன்றதுதான் என்றார். நாம் உலக அளவில் விருதுகளை வென்றால் தமிழ்ப் படங்களின் நிலைமை மாறும்.

வெற்றுக் கால்களுடன் மராத்தானில் ஓடித் தங்கம் வென்ற அந்த எத்தியோப்பிய வீரனால் ஒரு இனம் எழுச்சி கொள்ளவில்லையா? அது போன்ற சர்வதேச விருதுகளை பெறும் போது நம் இனமும் எழுச்சி கொள்ளும்.

டிசிகா சொல்வதுபோல, “கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வணிகப் படங்களை எடுப்பதை விட அதே பணத்தில் எட்டு பை சைக்கிள் தீவ்ஸ்களை எடுத்துவிடலாம். பணமும் திரும்ப வரும். மகத்தான படங்க்ளும் கிடைக்கும்”.

வெறும் 75 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படம்தான் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். அப்படம் பெறாத பாராட்டுக்கள் இல்லை. விருதுகள் இல்லை. செலவழித்த பணத்துடன் பல மடங்கு பணத்தையும் அது திரும்பக் கொண்டுவந்தது.
‘அபாராஜிதோ’ படம் உள்ளூரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தைத் திரைப்பட விழாவில் வென்ற விருது சரிக்கட்டியது என்று சத்யஜித் ராய் சொல்லியிருக்கிறார். அதனால் பண நஷ்டம், விநியோகஸ்தர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

உலக அளவில் இந்திய சினிமா என்றாலே சத்தியஜித் ராய்தான். ராய் மாபெரும் இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழில் அப்படி யாரும் உருவாக முடியாதா? தாகூர் பெற்ற நோபல் பரிசைப் பந்தயப் பொருளாக வைத்து அவருடன் கவிபாடி வென்று அப்பரிசை அவரே எனக்குத் தரும்படிச் செய்வேன் என்று சொன்னானே பாரதி, அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையும் முனைப்பும் உடையவர்கள் யாரும் இங்கு இல்லையா? பெரிதினும் பெரிது கேள் என்றான் மகாகவி. நாமும் பெரிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அதற்காகப் போராட வேண்டும்.

ஆயிரம் மைல் பயணம் காலடி நிலத்திலிருந்துதான் தொடங்குகிறது.

இதற்கான முயற்சிகளை இப்பொழுது எடுக்கத் தொடங்கினால் இன்னும் நாலைந்து ஆண்டுகளில் கமல் தமிழ்ப் படத்திற்காக ஆஸ்காரோ, கான் விருதோ வென்று வரும் நிலை உருவாகலாம். அப்போது அந்த உலக நாயகனை வரவேற்க மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாபெரும் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை.

**

No comments:

Post a Comment