Friday, September 3, 2010

தி வே ஹோம்




                 
 மெளனமாய் சில பாடங்கள்
     யுகன்

இக்கதை ஒரு கோடைவிடுமுறை காலத்தில் நிகழ்கிறது.
ஷாங்க்-வூ ஏழு வயது பையன். அவனது அம்மா கணவனைப் பிரிந்து வாழ்பவள். வைத்திருந்த கடையும் நஷ்டமாகி விட்டாதால் புதிய வேலை தேடும் பொருட்டு தன் மகனை மலையோரக் கிராமத்தில் வசிக்கும் தன் தாய் வீட்டில் விட்டு விட வருகிறாள்.
பாட்டிக்கு 75 வயது. அவளால் வாய்பேச முடியாது. காது மந்தம், கூன் விழுந்த முதுகு. நகரத்தில் பிறந்த வளார்ந்த ஷாங் வூவிற்கு கரண்ட் இல்லாத பைப்பில் தண்ணீர் வராத பாட்டியின் வீடு சுத்தமாகப்பிடிக்கவில்லை. அம்மா வலுக்கட்டாயமாக அங்கு இருக்கச் சொல்கிறாள் என்பதால் பாட்டியில் ஷூவின் மீது சிறுநீர் கழிக்கிறான்.
அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் போது பாட்டி அவனை கைபிடித்து கூப்பிட அவளுக்கு கை கொடுக்க மறுக்கிறான். அவன் நெஞ்சில் கையை வைத்து வட்டம்போட்டு ஜாடை காட்டுகிறாள். அது என்னவென்று புரியாத ஷாங்வூ அவளை பைத்தியக்காரி என்று திட்டுகிறான்.
பாட்டி கொடுத்த உணவுகளைச் சாப்பிடாது தான் கொண்டு வந்த டின் உணவுகளையேச் சாப்பிடுகிறான்.. பாட்டியிடம் நட்புடன் இருக்கும் பக்கத்துவீட்டுப் பையன் நட்பு கொள்ள வரும்போது அவனிடம் பேச மறுக்கிறான். அவனுக்கு இருக்கும் ஓரே பொழுது போக்கு வீடியோ கேம் விளையாடுவது தான். எந்த நேரமும் விளையாடிக்கொண்டிருக்கிறான். பாட்டி அவனிடம் கேட்கும் ஓரே உதவி ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்க வேண்டுமென்பதுதான். அதையும் வேண்டாவெறுப்பாக கோர்த்துக் கொடுப்பான்.

ஒரு நாள் வீடியோ கேமின் பேட்டரியும் தீர்ந்து விடுகிறது. பாட்டியிடம் பணம் கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லையென்கிறாள். துவைத்துக் கொண்டிருக்கும் பாட்டியை கோபத்தில் தள்ளிவிடுகிறான்.
பாட்டி பணம் தராததால் பாத்திரத்தை எட்டி உதைத்து உடைக்கிறான். பாட்டியின் ஷூவையும் ஒளித்து வைக்கிறான். அத்துடன் வீட்டின் சுவரின் பாட்டியை கேலி செய்து படங்களும் வரைந்து வைக்கிறான். பாட்டி இவையனைத்தையும் பார்த்துவிட்டு அவனை ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள்.

ஒரு நாள் பாட்டி அவனிடம் என்ன வேண்டுமென்று கேட்க கெண்டகி சிக்கன் வேண்டுமென்று கேட்கிறான். பாட்டி கோழி வாங்க நகருக்குப் போகிறாள். முதன் முறையாக பாட்டியை அன்புடன் கையசைத்து அனுப்பி வைக்கிறான்.
பாட்டி மழையில் நனைந்த படி வீடு திரும்புகிறாள். தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி சாப்பிடு என்கிறாள். அவன் வேகவைத்த கோழி தேவையில்லை வறுத்த கோழிதான் வேண்டுமென்று அடம்பிடித்து அழுகிறான். இரவு எழுந்து பசி பொறுக்காமல் சாப்பிட்டு விடுகிறான்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் முந்தைய நாள் மழையில் நனைந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. முதன்முறையாக பாட்டி மீது பரிதாபபடுகிறான். பாட்டிக்கு போர்த்தி விடுகிறான். நெற்றியில் ஒத்தடமும் தருகிறான்.

மறுநாள் பாட்டியுடன் நகரத்திற்கு போகிறான். பாட்டி தன் தோட்டத்தின் விளைந்த பூசணிக்காய்களை விற்று அவனுக்கு ஷூ வாங்கி தருகிறாள். ஹோட்டலில் அவனுக்குப் பிடித்தமான உணவுகளை வாங்கித் தருகிறாள். பஸ் ஏறும் போது அவன் சாக்லேட் வேண்டுமென்று கேட்க அதையும் வாங்கித் தருகிறாள். இப்பொழுது ஒருவருக்கு ம்டடுமே பஸ் காசு இருக்கிறது, அவனை ஏற்றி விடுகிறாள்.

பாட்டி மாலை தான் வீடு திரும்புகிறாள். அதன் பிறகு தான் பாட்டி நடந்தே வந்திருக்கிறாளென்பதை அறிந்து மனம் நெகிழ்கிறான். அவளிடமிருந்து அன்புடன் மூட்டையை வாங்கிக் கொள்கிறான். முதன் முறையாக பாட்டி மீது அவனுக்கு அன்பு பிறக்கிறது.

தன் வீடருகே இருக்கும் பையனை மாடு விரட்டிவிடுகிறது என்று பொய் சொல்லி கீழே விழ வைக்கிறான். அவன் அடிக்க வர அவன் பாட்டி அடிக்கடி செய்வது போல நெஞ்சில் வட்டமிட்டு கான்பிக்கிறான். மறுநாள் ஷாங்வூவை மாடு உண்மையிலேயே விரட்டி வர அந்தப் பையன் தான் காப்பாற்றுகிறான். அப்போது நேற்று நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான். அது தான் நேற்றே மன்னிப்புக் கேட்டு விட்டாயே என்கிறான். அப்போது தான் நெஞ்சில் வட்டமிட்டு காட்டினால் மன்னிப்பு கேட்பது என்று அர்த்தம் என்று தெரிந்து கொள்கிறான்.

பாட்டியின் மீது அன்பு பிறந்த அத்தருணத்தில் அம்மா அழைத்துப் போக வருவதாக எழுதிய கடிதம் வருகிறது.

ஷாங் வூ தானாகவே நிறைய ஊசியில் நூல் கோர்த்து வைக்கிறான்

மறுநாள் ஊருக்கு கிளம்புகிறார்கள். அம்மா பாட்டியிடம் எதாவது சொல்லவேண்டுமா என்கிறாள். ஷாங் வூ அமைதியாக நிற்கிறான். பஸ் வருகிறது. அதில் ஏறுகிறார்கள். பஸ் சிறுது தூரம் போன பிறகு மனம் கேளாத ஷாங் வூ பஸ்ஸின் பின் புற கண்ணாடியில் வழியாக நடந்த அனைத்திற்கும் மன்னிப்புக் கேட்பது போல நெஞ்சில் வட்டமிட்டு காண்பிக்கிறான். அன்புடன் கையை அசைத்து டாட்டா காண்பித்து விடைபெற்றும் கொள்கிறான். உலகிலுள்ள் அத்தனை பாட்டிக்குகளுக்கும் இப்படம் சமர்ப்பணம் என்பதோடு படம் முடிகிறது.

படம் முடியும் போது நம் இதயம் கனத்திருக்கும். நம் மனமும் பால்ய காலத்திற்கு சென்று நம் பாட்டியின் அன்பைத் தேடும்.

தன் வாழ்வின் பெரும் பகுதியை வாழ்ந்து முடிந்து விட்ட அந்த வாய் பேச முடியாத பாட்டி தன் ஏழு வயது பேரனுக்கு எதுவும் பேசாமலே வாழ்வின் நெறிகளான எதையும் எதிர்பார்க்காத அன்பு, பொறுமை கருணை, இயற்கையை நேசிக்கும் குணம், என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறாள்.

வாய் பேச முடியாத அந்த மூதாட்டி ஷாங் வூ கிற்கு மட்டுமல்ல படம்  பார்க்கும் நம் அனைவருக்கும் மெளனத்தின் மூலம் பாடம் கற்றுத் தருகிறாள்.

பல்வேறு விருதுகளையும் உலகம் முழுவதும் நன்மதிப்பையும் பெற்ற  இந்த தென்கொரிய நாட்டுத் திரைப்படம் 2002-இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஒரு பெண். அவர் பெயர் லீ ஷியான் ஹியான்.

கமல் 50

கமல் 50


பெரிதினும் பெரிது கேள்.


* யுகன்

ஐந்து வயதில் தேசிய விருதுடன் தன் திரை வாழ்வைத் தொடங்கிய கமல் ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர் உலக நாயகன் என்று போற்றப்படுகிறார். தயக்கத்துடன் தான் நடிக்கத் துவங்கினேன் என்று கூறும் கமல் இன்று மகத்தான நடிகராக விளங்குகிறார். திரையுலகின் பல்வேறு துறைகளில் தன் அடையாளத்தையும் தனக்கான இடத்தையும் தேடிக்கொண்டிருந்த அவருக்கு நடிப்பதில் இருந்த தயக்கத்தைப் போக்கி சரியான திசையில் திருப்பியவர் இயக்குநர் கே. பாலச்சந்தர்.

கமல் பதினாறு வயதிற்கு முன்னாலே ஒரு ஹீரோவாக நிலை பெற்றுவிட்டாலும் 16 வயதினிலே படம்தான் அவரின் நடிப்பின் மேதமையை வெளிக்காட்டுவதாய் அமைந்தது. அடுத்து சிகப்பு ரோஜாக்கள். இப்படங்களை நடித்து முடித்தபோது அவர் வயது 24. இந்த வயதில் இவ்வளவு அற்புதமாக நடித்தவர் இப்போது, 55 வயதில், நடிப்பில் பல சிகரங்கலை எட்டியிருக்க வேண்டுமல்லவா? உலகம் போற்றும் நடிகராக மாறியிருக்க வேண்டுமல்லவா? அதாவது அவர் ரசிகர்கள் அவரை அன்போடு அழைப்பதுபோல உண்மையிலேயே உலக நாயகனாக ஆகியிருக்க வேண்டுமல்லவா?

இன்று கமல் இந்திய அளவில் முக்கியமான நடிகராகக் கருதப்படுகிறார். இந்திய அளவில் நசீருத்தீன் ஷா, ஓம் பூரி, மம்மூட்டி, மோகன்லால் என்று எத்தனையோ திறமைசாலிகள் இருந்தாலும் பன்முக நடிப்பு - அதுவும் படத்தைத் தோளில் சுமக்கும் நாயக வேடங்களில் - என்று வரும்போது கமல் தன் சமகாலத்தவர்கள் பலரையும்விடச் சில அடிகளாவது முன்னால் நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அமிதாப் பச்சன், தர்மேந்திரா போன்ற நட்சத்திரங்கள் பன்முக நடிப்பில் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள் என்றாலும், மிகவும் வித்தியாசமான வேடங்கள், வேடங்களுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வது, எல்லா வகை நடிப்பிலும் காணப்படும் நுட்பமான வெளிப்பாடுகள் என்று பார்க்கும்போது கமலின் திறமை தனித்து நிற்கிறது.

ஆனால் இந்தத் திறமைகள் அவரிடமிருந்து மிகச் சிறந்த சினிமா அனுபவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். சிறந்த படங்கள், அசாத்தியமான பாத்திரங்கள் என்று அவரது எல்லைகளும் பங்களிப்பும் விரிவடைந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் நடக்கவில்லை? இதற்குக் காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் வணிகச் சூழல் அவரை நட்சத்திரமாக்கிவிட்டது. நட்சத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் புதிய பரிசோதனைகளை, தேடலை முடக்கிவிட்டது. ஆகவே அவரது திறமை முழுமையாக வெளிப்படாததிற்கு வணிகச் சூழல்தான் காரணம் என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது ஒரு முக்கியமான காரணம்தான். ஆனால் இது மட்டும்தான் கமல் என்னும் கலைஞனின் விகாசத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று சொல்லிவிட முடியுமா? பிற துறைகளில் சாதித்தவர்கள் எப்படிச் சாதித்தார்கள்? அவர்களுக்கு மட்டும் சூழலின் ஒத்துழைப்புக் கிடைத்துவிட்டதா?

செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாத நம் தேசத்திலிருந்து உலகம் போற்றும் ஒரு விஸ்வநாதன் ஆனந்த் உருவானது எப்படி? துப்பாக்கி சுடும் போட்டியில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் சூழல் இல்லாத ஒரு துறையில் அபின்வ் பிந்தரா சாதித்தது எப்படி? பண்டிட் ரவிஷங்கர், பிஸ்மில்லா கான் போன்றவர்கள் உலக அளவில் மதிக்கப்படும் கலைஞர்களாக உருவானது எப்படி? சத்யஜித் ராய் இறுதிவரை கலைஞராக வாழ்ந்துவிடவில்லையா? பதேர் பாஞ்சாலி படமெடுக்க அவர் பட்ட பாடு நாடறியும். அது தானே இந்தியாவில் உன்னதமான சினிமாவைத் தொடங்கிவைத்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் ஏன் ஒவ்வொரு படம் எடுக்கவும் இவ்வளவு பாடுபட வேண்டும்? ஹாலிவுட் சினிமாவில் மாட்டிக்கொண்டு நல்ல கதாபாத்திரங்களுக்காக ஏங்கி அலைந்தாரே இங்கிரிட் பெர்க்மென். ஒரு தொழிலதிபர் அவரிடம் நட்புக் கொள்ளக் கோடிக்கணக்கான் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்டுடியோவே வாங்கித் தருகிறேன் என்ற போது அதெல்லாம் எனக்கெதற்கு, எனக்குத் தேவை நல்ல இயக்குனரும் ஒரு நல்ல ஸ்கிரிப்டும்தான் என்று அவர் சொல்லவில்லையா?. “நல்ல படமெடுப்பதற்காக என் சம்பாத்தியம் அனைத்தையும் இழந்தேன். ஆனால் இன்று என் படங்கள் இல்லாத வீடியோ லைப்ரரியே இல்லையென்று விக்டோரியா டிசிகா பெருமைப்பட்டுக்கொள்லவில்லையா?

இந்தக் கேள்விகள் கமல் ஹாசனைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் எழுப்பப்படவில்லை. ஆனால் நட்சத்திரமாக ஜொலிப்பதற்காகக் கலைஞனாக வாழ முடியாமல்போனது துரதிருஷ்டவசமானது. கலைஞனாக வாழ்வதா, நட்சத்திரமாக வாழ்வதா என்பதைக் குறிப்பட்ட நபர்தான் முடிவு செய்ய வேண்டும். கலைஞனாக வாழ விரும்பினால காலத்திடம் அதற்கான விலையைத் தந்துதான் ஆக வேண்டும். புதுமைப்பித்தன் எந்த விலை தந்தாரோ அந்த விலையை. தாஸ்தாயெவ்ஸ்கி என்ன விலை தந்தாரோ அந்த விலையை. கலைஞனாக வாழ்வது அத்தனை எளிதன்று. அதுவும் தமிழ் சினிமாவில். தவிர, வெற்றியும் கலை உணர்வும் இசைந்துபோவது தமிழில் மட்டுமல்ல, எங்குமே கடினமான விஷயம்தான். இந்தப் பின்னணியில்தான் ஒருவரது இலக்கு என்ன என்பது குறித்த கேள்வி எழுகிறது.

உலக அளவில் சிறந்த நடிகனாக அறியப்பட வேண்டுமென்றால், சாதிக்க வேண்டுமென்றால், அதற்கு விலை கொடுத்தே ஆக வேண்டும். கமலை ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்று அழைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் உண்மையிலேயே இந்தப் பட்டங்களுக்குத் தகுதியானவராக ஆக வேண்டும் என்று அவர் நினைத்தால் தமிழகச் சூழலில் பெருவாரியான மக்களைக் கவர்ந்து வசூலைக் குவிக்கும் படங்களை மட்டும் நம்பியிருந்தால் போதாது. நம்மிடம் மகத்தான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். கதாசிரியர்கள் இருக்கிறார்கள். இயக்குநர்கள் இருக்கிறார்கள். நடிப்பதற்குக் கமல் இருக்கிறார். வேறு என்ன தேவை சர்வதேச விருதுகளை வெல்ல?

கான் விருது சிறந்த கலை முயற்சிகளுக்காகக் கொடுக்கப்படும் விருது. ஆஸ்கார் விருது என்பது வெகுஜனத் திரைப்படங்களுக்கானது. அது அமெரிக்கப் படங்களுக்கு அமெரிக்கர்களே கொடுத்துக்கொள்வது. ஆனால் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது பிரிவு ஒன்றிருக்கிறது. அதில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். அதில் குறைந்த பட்சம் 40 படங்களாவது மகத்தான படங்கள் என்று கூறிவிட முடியும் (பை சைக்கிள் தீவ்ஸ், ரஷோமான், லாஸ்ட்ரடா, ஃபர்பிடன் கேம்ஸ், தி வர்ஜீன் ஸ்பிரிங், நோ மேன்ஸ் லேண்ட் ஆகியவை சில உதாரணங்கள்). இந்தப் படங்களுக்குப் பக்கத்தில் வைத்துப் பேசக்கூடிய அசலான படம் எதிலேனும் கமல் இதுவரை நடித்திருக்கிறாரா? இவற்றோடு ஒப்பிடக்க்கூடிய படங்களை எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள் (உதாரணம் அடூர்). அவர்கள் படங்களில் கமல் நடிக்காமல் போனதற்குக் காரணம் என்ன?

நட்சத்திர அந்தஸ்துக்கேற்ற படங்களில் நடித்துக் கமல் பொருளும் புகழும் சம்பாதிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உலக நாயகன் என்று புகழப்படும் அவர் அந்தப் புகழ்ச்சிக்கு நியாயம் செய்யும் விதத்தில் அவ்வப்போது சில படங்களில் நடிக்கலாமே என்பதுதான் கமலிடம் அதிகமாக எதிர்பார்ப்பவர்களின் ஆதங்கம். திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கு என்றே கமல் நடிப்பில் ஏன் படம் தயாரிக்கப்படக் கூடாது? சர்வ தேசப் போட்டியில் போட்டியில் ஜாம்பவன்களோடு மோதி விருது வென்று வரும் வாய்ப்பு அவருக்கு ஏன் கிடைக்கக் கூடாது?

இதுபோன்ற படங்கள் இங்கே ஓடாது என்று சொல்லப்படுவதில் முழு உண்மை இல்லை. வங்காளத்தில் ராயின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் தியேட்டர்க்காரர்கள் படத்தைத் தூக்கிவிட்டார்கள். அது கான் விருது வென்ற பிறகு மீண்டும் அவர்களே திரையிட்டார்கள். படம் நூறு நாட்கள் தாண்டி ஓடியது.

இயக்குனர் மகேந்திரன் ஒரு முறை கூறியது போன்று உலக சினிமா எடுப்பது ஒன்றும் சீனப் பெருஞ்சுவர் கட்டுவதுபோலக் கடினமான காரியம் இல்லை. ‘தி வே ஹோம்’ என்னும் கொரியப் படத்தில் பேரன் பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் தருவது போன்றதுதான் என்றார். நாம் உலக அளவில் விருதுகளை வென்றால் தமிழ்ப் படங்களின் நிலைமை மாறும்.

வெற்றுக் கால்களுடன் மராத்தானில் ஓடித் தங்கம் வென்ற அந்த எத்தியோப்பிய வீரனால் ஒரு இனம் எழுச்சி கொள்ளவில்லையா? அது போன்ற சர்வதேச விருதுகளை பெறும் போது நம் இனமும் எழுச்சி கொள்ளும்.

டிசிகா சொல்வதுபோல, “கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வணிகப் படங்களை எடுப்பதை விட அதே பணத்தில் எட்டு பை சைக்கிள் தீவ்ஸ்களை எடுத்துவிடலாம். பணமும் திரும்ப வரும். மகத்தான படங்க்ளும் கிடைக்கும்”.

வெறும் 75 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படம்தான் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். அப்படம் பெறாத பாராட்டுக்கள் இல்லை. விருதுகள் இல்லை. செலவழித்த பணத்துடன் பல மடங்கு பணத்தையும் அது திரும்பக் கொண்டுவந்தது.
‘அபாராஜிதோ’ படம் உள்ளூரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தைத் திரைப்பட விழாவில் வென்ற விருது சரிக்கட்டியது என்று சத்யஜித் ராய் சொல்லியிருக்கிறார். அதனால் பண நஷ்டம், விநியோகஸ்தர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

உலக அளவில் இந்திய சினிமா என்றாலே சத்தியஜித் ராய்தான். ராய் மாபெரும் இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழில் அப்படி யாரும் உருவாக முடியாதா? தாகூர் பெற்ற நோபல் பரிசைப் பந்தயப் பொருளாக வைத்து அவருடன் கவிபாடி வென்று அப்பரிசை அவரே எனக்குத் தரும்படிச் செய்வேன் என்று சொன்னானே பாரதி, அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையும் முனைப்பும் உடையவர்கள் யாரும் இங்கு இல்லையா? பெரிதினும் பெரிது கேள் என்றான் மகாகவி. நாமும் பெரிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அதற்காகப் போராட வேண்டும்.

ஆயிரம் மைல் பயணம் காலடி நிலத்திலிருந்துதான் தொடங்குகிறது.

இதற்கான முயற்சிகளை இப்பொழுது எடுக்கத் தொடங்கினால் இன்னும் நாலைந்து ஆண்டுகளில் கமல் தமிழ்ப் படத்திற்காக ஆஸ்காரோ, கான் விருதோ வென்று வரும் நிலை உருவாகலாம். அப்போது அந்த உலக நாயகனை வரவேற்க மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாபெரும் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை.

**

தி ரோடு ஹோம்


தி ரோடு ஹோம்.
 
தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு நகரத்திலிருந்து தன் மலையோரக் கிராமத்திற்கு வருகிறான் யுசெங். அவனின் தந்தை ஷாங்க் யூ அந்தக் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசியராகப் பணிபுரிந்தவர். அவரின் உடல் தற்போது கிராமத்திலிருந்து 40 கி.மீ. தள்ளியிருக்கும் மருத்துவமனையில் இருக்கிறது. கார் வைத்து உடலை கொண்டு வராமல் ஆட்கள் சுமந்தே கொண்டு வரவேண்டுமென்கிறார்கள் அவனின் அம்மா. உடலை தேரில் வைத்து நடந்தே தூக்கி வந்தால் வீட்டிற்கு வரும் பாதையை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். அது கடும் பனிக்காலம் கிராமத்தில் இருக்கும் ஆட்களும் மிகக்குறைவு. இருந்தும் ஆசிரியரின் மீது கொண்ட அன்பினால் அவ்வாறு செய்யக் கிராமத்தினர் ஒத்துக்கொள்கின்றானர். பின் அவனின் அம்மா, தந்தையின் சவப்பெட்டியின் மீது விரிக்க தன் கைப்பட சிவப்புத்துணி நெய்ய வேண்டுமென்று சொல்லி நெடுநாட்களாக பழுதுபட்டுக்கிடக்கும் தறியை சரி செய்யச்சொல்கிறாள். அந்த தள்ளாத வயதிலும் தன் கையாலேயே நெய்கிறாள்.

வீட்டின் ஒரு அறைக்குள் நுழையும் யுசெங், தன் அப்பா,அம்மா சிறுவயதில் எடுத்த போட்டோவைப் பார்க்கிறான். அவள் பெற்றோர்களின் காதல் கதை ஊர்முழுதும் தெரிந்த விசயம். அவர்களின் காதல் பற்றி பேசாத ஊர்க்காரர்களே இல்லை. அக்கதையை யூசெங் சொல்லத்தொடங்குகிறான்.   காட்சி மாறி கதை அந்தக் காலத்திற்குச் செல்கிறது.

யுசெங்கின் தந்தை ஷாங்க்யூ பள்ளிக்கூடமே இல்லாத அக்கிராமத்திற்கு வருகிறார். யுசெங்கின் அம்மா ஷாவோ ஆசிரியர் சாங்க்யுவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறாள். அவர் வந்தபின் சிறு பள்ளிக்கூடம் கட்டத் தொடங்குகின்றனர். சீனா கம்யூனிச நாடு என்பதால் பள்ளிக்கூடம் கட்டுவதில் கிராமத்தினர் அனைவருமே ஈடுபடுகின்றனர். கட்டிட வேலையில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களின் வேலை சமைத்து தருவது மட்டும்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலை செய்பவர்களுக்கு உணவு போகும் முதலில் வைத்திருக்கும் உணவை ஆசிரியர் எடுத்துக்கொள்வார் என்று தெரிந்ததும் ஷாவோ மறுநாளிலிருந்து மற்ற உணவுகளை தள்ளிவைத்துவிட்டு தன் உணவுப் பாத்திரத்தை வைக்கிறாள். ஊரில் ஒவ்வொருவரும் ஆசிரியரை வீட்டிற்கு விருந்தழைப்பார்கள் அன்று ஷாவோவின் முறை. ஷாங்க்யூவிற்கு பரிமாறுகிறாள். அவளின் உணவைச் சாப்பிட்ட பிறகு, தினமும் இவள் செய்த உணவைத் தான் சாப்பிட்டோம் என்று உணர்ந்து கொள்கிறார். பல சந்திப்பிற்குப் பிறகு அவரும் இவள் மீது காதல் கொள்கிறார். ஒரு நாள் அவருக்கு வெளியூரிலிருந்து அழைப்பு வர அவர் போய் விடுகிறார். அவரைப் பிரிந்து இருக்க முடியாமல் ஷாவோ தவிக்கிறாள். கடும் பனி பொழியும் நேரத்திலும் ஊருக்கு வரும் பாதையில் போய் அவர் வருகிறாரா எனப் பார்க்கிறாள். உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. அவளின் நிலையை அறிந்த ஊர்க்காரர்கள், ஆசிரியரை திரும்ப ஊருக்கு அழைத்து வருகின்றனர். இருவரும் இணைகின்றனர். அதன் பிறகு அந்த 40 வருடத்தில் ஒரு நாள் கூட இணை பிரியாது வாழ்கின்றனர்.

கதை முடிந்து நிகழ் காலத்திற்கு வருகிறது ஆசிரியர் ஷாங்க்யுவின் உடலை கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தோளில் வைத்து தூக்கிவருகின்றனர். பள்ளியின் அருகிலேயே புதைக்கின்றனர் சடங்குகள் முடிந்து யுசெங் ஊயிருக்குக் கிளம்பும்போது தன் அம்மாவை தன்னுடன் நகரத்திற்கு வந்து விடுமாறு கூப்பிடுகிறான். உன் தந்தையின் குரல் தன் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று சொன்னவள் ஊரை விட்டு வரமாட்டேன் என்கிறார். விரைவில் அப்பள்ளியை இடித்துவிட்டு புதியபள்ளி கட்டப்போவதால் கடைசியாகப் பார்த்துக்கொள்ளலாம் பின் அவனுடன் பள்ளிக்கு வருகிறாள். அப்போது உன் தந்தை உன்னை ஆசிரியராக்க வேண்டுமென்று தான் நினைத்தார். அதனால் உன் தந்தை போன்று நீ ஒரு நாளாவது பாடம் நடத்தவேண்டும் என்கிறாள். அப்புறம் வழக்கம் போல நகரத்திற்குபோய் உன் வேலையைச் செய் என்கிறாள்.

மறுநாள் யுசெங் பாடம் நடத்துகிறான். வேலை செய்து கொண்டிருந்த அம்மா குரல் கேட்டு வீட்டிலிருந்து பள்ளி நோக்கி ஓடி வருகிறாள். கிராமத்திலிருந்து பலர் பள்ளி முன்பு ஏற்கனவே கூடியிருக்கிறனர். தன் அப்பாவிற்காகவும், அம்மாவிற்காகவும் தான் பாடம் நடத்துவதற்காகச் சொல்கிறான். தன் தந்தை சொந்தமாக உருவாக்கிய பாடம் புத்தகத்தை வைத்து வகுப்பு எடுக்கிறான். அப்புத்தகத்தை வைத்துத்தான் அவரும் தன் முதல் வகுப்பை எடுத்தார். அவன் குரல் கேட்டு அம்மா கண் கலங்குகிறாள். அவன் குரலின் மூலம் தன் கணவனின் நினைவுக்கு ஆட்படும் அவள், இளம் பெண்ணாக மலைப்பாதையில் சந்தோஷமாக ஓடுவதோடு படம் முடிவடைகிறது.

காதல் வாழ்வின் அழியாத விசயங்களில் ஒன்று. காலம் கடந்த பிறகும் அது அழியாது ஜீவித்து நிற்கிறது. ஷாவோவின் காதல் அத்தனை புனிதமானது ஷாங்க்யுவின் மீது அவள் கொண்ட காதல் அளவிட முடியாது. அவனைப் பார்த்த முதல் நொடியிலிருந்து காதலிக்கத் தொடங்கியவள் வாழ்நாள்முழுவதும் அவன்மீது காதல் கொண்டவளாகவே இருக்கிறாள். காதல் கனவு நிறைந்தது என்பதால் படத்தின் பழைய காதல் நினைவுகள் வண்ணத்திலும் பிற நிகழ்காலக் காட்சிகள் அனைத்தும் கறுப்பு வெள்ளையிலும் படமாக்கப்பட்டிருப்பது கவித்துவமானது. நல்ல காதலி கிடைத்தவன் பூமியிலேயே சொர்ககத்தைக்காண்பான் என்பார்கள் ஷாங்க்யுவிற்கும் ஷாவோ என்னும் அற்புதமான காதலி கிடைத்திருக்கிறாள். படம் பார்க்கையில் நம் மனதும் கடந்த காலத்தை நோக்கி சிறகடிக்கப்பதை தவிர்க்க இயலாது.

பல விருதுகளையும் பெரும் நன் மதிப்பையும் பெற்ற இந்தச் சீனத் திரைப்படம் 1999 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஷாங்க்யுமு.

Sunday, August 8, 2010

                                  லைப் இஸ் பியூட்டிஃபுல்
                                                                     
                                                                        யுகன்



வாழ்வின் அழகு

கதையின் நாயகன் கிய்தோ இத்தாலியில் உள்ள கிராமத்திலிருந்து நகரில் புத்தகக்கடை ஒன்று திறக்கும் கனவோடு தன் நண்பன் ஃபெரூச்சியோவுடன் வருகிறான். வரும் வழியில் அவர்கள் வந்த கார் ரிப்பேராகிறது. ஒரு பண்ணை வீட்டருகே நின்று ரிப்பேர் செய்யும் போது நாயகி தோராவைச் சந்திக்கிறான். அவர்களுடான ஒரு இனிய சந்திப்பு நிகழ்கிறது. கிய்தோ அபார நகைச்சுவை திறன் உடையவன். தொடர்ந்த பல சந்திப்புகளில் தோராவின் மனம் கவர்கிறான். மழை பெய்து முடிந்த ஓரிரவில் தன் காதலை அவளிடம் சொல்கிறான். அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக் கொள்கிறாள். மறுநாள் அவருக்கு நிசசயதார்த்தம். அவன் வேலை செய்யும் ஹோட்டலில் தான் நிச்சயதார்த்த விழா நடக்கிறது. தோரா அங்கிருந்து தன்னை அழைத்துச் செல்லும் படி கூறுகிறாள்.

அவர்களுடைய மகிழ்ச்சியான திருமணவாழ்க்கை தொடங்குகிறது வருடங்கள் சட்டென பறந்தோடி விடுகிறது. கிய்தோ தோராவுக்கு இப்பொழுது ஜோஸ்வா என்னும் ஐந்து வயது மகன் இருக்கிறான். கிய்தோவும் தான் நினைத்தது போலவே புத்ததக்கடை திறந்து விடுகிறான். சிறிய வீடு, சைக்கிள் தான் அவர்களது வாகனம். எளிய அழகான வாழ்க்கை என அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாய் போய்க்கொண்டிருக்கிறது. அம்மகிழ்ச்சியைக் குலைப்பது போல ஹிட்லரின் நாஜிப்படைகள் நகருக்குள் நுழைகின்றன.

ஜோஸ்வாவின் பிறந்த நாளன்று கிய்தோ, ஜோஸ்வா, கிய்தோவின் மாமா உள்ளிட்ட பல யூதக் குடும்பங்களை நாஜிப்படை சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் செல்கிறது. தோரா ஜெர்மானியப் பெண்ணாக இருந்தாலும் தன் கணவன் குழந்தை போக இருக்கும் சித்திரவதை முகாமிற்கு போகத் துணிகிறாள்.
ஆண்கள் ஒரு புறம் பெண்கள் புறம் மாட்டுக்கொட்டகளைப் போன்ற இடத்தில் தங்க வைத்து கடுமையாக வேலைவாங்கப்படுகின்றனர்.ஒருவர் எந்த நிமிடமும் கொல்லப்படலாம் என்ற சூழ்நிலைதான் அங்கு நிலவுகிறது.

கிய்தோ தன் ஐந்து வயது மகன் சித்திரவை முகாமின் இந்தக் கொடுமை கண்டு பயந்து விடக் கூடாதென்பதற்காக நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் விளையாட்டு என்கிறான். விளையாட்டில் ஆயிரம் புள்ளிகள் எடுத்தால் புத்தம் புதிய பீரங்கி வண்டி பரிசு என்கிறான். ஜோஸ்வாவும் அதை நம்புகிறான். கிய்தோ ஜோஸ்வாவிடம் அனைத்தும் விளையாட்டு என்று வெறுமனே சொல்லிவிடுவதோடு நில்லாமல் அதை அவன் நம்ப வைக்க கிய்தோ எடுக்கும் பிரயத்தனங்கள் தான் திரைப்படத்தை உன்னதமான இடத்திற்கு எடுத்துச்செல்கிறது.

கிய்தோ இப்படத்தில் தொடர்ந்து இரண்டு விஷயங்களைச் செய்வார். ஒன்று தோரா தன் காதலியாக இருந்த போதும், மனைவியாக ஆன பிறகும் அவளைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பார். மற்றொன்று தன் மகன் ஜோஸ்வாவிடம் நடக்கும் அனைத்தும் விளையாட்டுத்தான் தொடர்ந்து நீரூபித்துக் கொண்டே இருப்பார். கிய்தோவின் அன்பு நிகரற்றது. இறுதியில் தன் மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் வீரர்களிடம் பிடிபட்டுவிடுவார். தன் மகன் ஒளிந்திருக்கும் இடத்தின் வழியாக தான் வீரன் அவரைக் கொல்வதற்காக அழைத்துப் போவான். மரண வாயிலுக்குப் போகும்போது ஒளிந்திருக்கும் தன் மகன் பார்ப்பான் என தெரிந்து இதுவும் ஒரு விளையாட்டுதான் என்று நீருபிக்க கையை காலை ஆட்டி புன்னகையுடன் லெப்ட் ரைட் போட்டு நடப்பார். மகனும் அது கண்டு சிரிப்பான். அக்காட்சி நமமை கலங்க வைக்கும்.

போர் முடிகிறது. நேசப்படை கைதிகளைக் அழைத்துச்செல்ல வருகிறது. ஜோஸ்வா முன்னால் பெரிய பீரங்கி வண்டி வந்ததும் தந்தை சொன்னது உண்மையென கூக்குரலிடுவான். நேசப்படை வீரன் பீரங்கி வண்டியில் ஜோஸ்வாவை ஏற்றுக் கொள்கிறான். கூட்டத்தில் தன் அம்மாவைப் பார்த்ததும் அவளை நோக்கி தாவி ஓடுகிறான். தோரா அவனை முத்த மழையில் நனைக்கிறாள். ஜோஸ்வா தன் தந்தை இறந்ததை அறியாது ‘நானும் அப்பாவும் 1000 பாயிண்ட்ஸ் எடுத்து பீரங்கி வண்டியை ஜெயித்துவிட்டோம் என்று ஆர்ப்பரிக்கிறான். காட்சி உறைந்து படம் முடிகிறது. படம் முடிகையில்

கிய்தோவின் அன்பை, தியாகத்தை நினைத்து நம் கண் கலங்கி மனம் கனத்துவிடும். கிய்தோ இப்படத்தில் பார்வையாளர்களுக்கும் தன் மகன் ஜோஸ்வாவுக்கும் நேரடியாக அறிவுரை கூறாமல் வாழ்க்கையையே விளையாட்டுக் களமாக்கி பல விஷயங்களை சொல்லாமல் சொல்லிப் போகிறார்.

இந்த இத்தாலிய நாட்டுத் திரைப்படம் 1997 –ல் வெளியானது. இப்படம் ஆஸ்கார், கான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியிருப்பவர் ராபர்டோ பெனினி.
ஆங்கிலமொழி அல்லாத பிற மொழிப் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற ஓரே நடிகர் இவர் தான்.

மனதை நெகிழவைக்கும் இந்த அற்புதமான படத்தை நீங்களும் ஒரு முறை பார்க்க வேண்டும்.
.


                              யுகன்

        

டோட்டாவின் பிலிம் துண்டுகள்

சல்வடோர்-டி-விட்டா, ரோமின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். அன்று இரவு தாமதமாக வீடு திரும்பியவர், தன் காதலியின் மூலம் அல்ஃபிரேதோ இறந்த விஷயத்தைக் கேள்விப்படுகிறார். பெரும் கவலையடைகிறார். அவர் நினைவுகள் இப்பொழுது பால்ய காலத்தை நோக்கிச் செல்கிறது.

 சல்வடோர்-டி- விட்டா வின் செல்லப் பெயர் டோட்டோ. அவனுக்கு சினிமா என்றால் வெகு பிரியம். பள்ளி செல்லும் நேரம் தவிர தியேட்டரில் தான் இருப்பான். இதற்காக அவன் அம்மாவிடம் அடிக்கடி அடிகூட வாங்குவான். தியேட்டர் ஆப்ரேட்டர், அல்பிரேதோவுக்கு டோட்டோ மீது அன்பு உண்டு. டோட்டோ அவரிடம் ஆப்ரேட்டர் வேலையை தனக்கு கற்றுத் தரும்படி கேட்கிறான். அது ஒரு அடிமை வேலை என்று சொல்லி கற்றுத் தர மறுக்கிறார்.
பின் அவரே கற்றுத் தரும்படி ஆகி விடுகிறது. ஒரு நாள் தியேட்டரில் தீ விபத்து ஏற்படுகிறது. டோட்டோ அவரைக் காப்பாற்றுகிறான். ஆனாலும் அவர் பார்வை பறி போய் விடுகிறது. தியேட்டரும் எரிந்து போய் விடுகிறது.
இப்போது தியேட்டர் புதுப்பிக்கப்படுகிறது. டோட்டோ தான் புது ஆப்ரேட்டர். டோட்டோ இளைஞன் ஆகிறான் அல்ஃபிரேதோ நட்பும் இன்னும் பலப்படத்தான் செய்கிறது. தந்தையற்ற டோட்டோவிற்கு தன்னை தந்தை ஸ்தானத்தில் நிறுத்திக் கொள்ளும் அல்ஃபிரேதோ அவன் எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறார். ஒரு நாள் டோட்டோ 8 எம்.எம் கேமராவில் சில விஷயங்களை படம்பிடித்து வர,  அவனுக்கு சினிமா தான் எதிர்காலம் என்று கண்டுபிடிக்கிறார்.
அவன் எதிர்காலம் பாதிக்கப்படுமென்று நினைத்து அவன் காதலை அவனுக்கே  தெரியாமல் பிரிக்கிறார். ஊரை விட்டு நகரத்திற்கும் போகச் சொல்கிறார். எந்த வேலை செய்தாலும் ஆப்ரேட்டர் கேபினை நேசித்து வேலை செய்தது போல் செய் என்கிறார்.

டோட்டோ என்ற சல்வடோர் டி விட்டா இப்பொழுது புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன் கிராமத்துக்குத் திரும்புகிறார். அல்ஃபிரேதோவின் இறுதிச் சடங்கில் கலந்து  கொள்கிறார். பால்ய காலத்தில் தான் சந்தித்தவர்களை மீண்டும் சந்திக்கிறார். தன் காதலியையும் சந்திக்கிறார். அல்ஃபிரேதோ தன் காதலை பிரித்ததையும் அறிகிறார். காதலி அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்கிறாள். உன் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்கிறாள்.
அல்ஃபிரேதோ வீட்டிற்குப் போகிறார். அவர் பரிசாக விட்டுச் சென்றதாக, ஒரு பிலிம் ரோலையும். ஸ்டூலையும் அவர் மனைவி தருகிறார். அவர் எப்பொழுதும் உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார் என்றும் சொல்கிறாள்.
ரோம் திரும்பும் சல்வடோர், திரையரங்கில் அல்ஃபிரேதோ கொடுத்த பிலிம் சுருளை ஓட்டிப் பார்க்கிறார். அதில் தொடுக்கப்பட்ட பல முத்தக்காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது அந்த பிலிம் துண்டுகள் அனைத்தும் தான் சிறு வயதில் அவரிடம் கேட்டு அடம் பிடித்தவை, அதை அவர் தனக்குப் பரிசாக விட்டுச் சென்றிருக்கிறார் என்று அறிந்து கண்கலங்குகிறார்.

 ஒரு சாதரண தியேட்டர் ஆப்பரேட்டராக வாழ்வை முடிக்க நேர்ந்திருக்கும் தன்னை இவ்வளவு பெரிய ஆளாக்கிய, அந்த அற்புதமான மனிதரின் நட்பையும், அன்பையும் நினைத்து நினைத்து வியக்கிறார்.

முத்தக்காட்சிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சல்வடோர் சந்தோஷத்தில் கண்ணில் நீர் பெருக படம் பார்த்துக் கொண்டிருப்பதோடு படம் நிறைவடைகிறது.

இந்த உலகப் புகழ்பெற்ற இத்தாலிய சினிமாவின் இயக்குநர் கிசெப்பே டோர்னடோரே. இப்படம் ஆஸ்கார், கான் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
                                    சில்ட்ரன் ஆஃப் ஹெவன்
                                                                      
                                                                      யுகன்

மூன்றாவது பரிசுக்காக ஓடிய  கால்கள்.





அலி, தன் தங்கையின் ‘ஷூ’ வை, தைக்கப்போன இடத்தில் அதைத் தொலைத்துவிடுகிறான். தங்கையிடம் அதைச் சொல்ல அவள் அழுகிறாள். அப்பாவிடம் சொன்னால் இருவருக்கும் அடி கிடைக்கும் என்ற பயத்தாலும், அப்பாவிடம் தற்போதைக்கு பணமில்லை, நாம் ‘ஷூ’ கேட்டால் அவர் கடன்தான் வாங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வாலும் ‘ஷூ’ தொலைந்த விஷயத்தை அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் மறைக்கிறார்கள். அலியின் ‘ஷூ’ வையே இருவரும் போட்டுக் கொள்வதென முடிவெடுக்கிறார்கள். ஈரானில் காலையில் சிறுமிகளுக்கு, மதியம் பையன்களுக்கு பள்ளிக்கூடம் என்ற முறை இருக்கிறது.
அதனால் காலையில் தங்கை ஜாரா, ‘ஷூ’ வைப் போட்டுக் கொண்டு பள்ளி போய் வந்த பின் மதியம் இவன் போட்டுப் போவான். அதிலும் பல தடைகள், அதையும் அவர்கள் கடக்கிறார்கள்.

ஒரு முறை தன் தந்தையுடன் நகரத்தில் போய் பெரும் பணம் சம்பாதிக்கும் போது தன் தந்தையிடம், தங்கைக்கு ‘ஷூ’ வாங்கி விடலாம் என்கிறான். விபத்தினால். பணம் செலவாகி விட அக்கனவு கலைகிறது.

பள்ளியில் ஒட்டப்பந்தயப் போட்டியில் மூன்றாவது பரிசு ‘ஷூ’ என்றதும் போட்டியில் கலந்து கொள்கிறான். உலகமே முதலாவதாக வரத் துடித்துக் கொண்டிருக்கும் போது அலி மூன்றாவதாக ஓடி வந்து ‘ஷூ’ வை அடைவது தான் லட்சியம் என்றிருக்கிறான்.

தன் பள்ளிக்கும், வீட்டுக்கும் ஓடும் தங்கையின் ஒட்டத்தை நிறுத்துவதற்காக அலி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான். ஆனால், அவன் விரும்பியது போல் அல்லாது முதலாவதாக வந்து விடுகிறான். வெற்றி பெற்றும் தான் விரும்பிய பரிசை அடைய முடியாததால், தோல்வியாளனைப் போல அழுகிறான்.

அக்குழந்தைகளின் பரிசுத்தமான அன்பு, தியாகம், கருணை, நட்பு, நம் மனதை நெகிழச் செய்யும். இப்படம் அசல் சிறுவர் படம். ஆனால், பெரியவர்களையும் இடத்தைவிட்டு அசையாது பார்க்கச்செய்யும். உலகம் முழுவதும் பெரும் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்ற படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி. இவர் உலக சினிமாவின் முக்கியமான இயக்குநர்.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஈரான் படம் இது தான்.

                 கலர் ஆஃப் பாரடைஸ்
                        
                           யுகன்








கடவுளைத் தேடும் கை

சிறுவன் முகம்மது கண்பார்வையற்றவன். பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறான். ஆண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை வருகிறது. அவனுடன் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அவரவர் பிள்ளைகளை வந்து அழைத்துசெல்கின்றனர். முகம்மதுவின் தந்தை மட்டும் வெகு தாமதமாய் வருகிறார். வந்தவர் முகம்மதுவை திரும்ப அழைத்துச் செல்ல முடியாது அவனை பள்ளியிலே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளியின் முதல்வர் இது தொண்டு நிறுவனம் அல்ல என்று கூறி திட்டி அனுப்புகிறார்.

வேறு வழியில்லாமல் முகம்மதுவை ஊருக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்.

அவருக்கு முகம்மது மற்றும் இரண்டு மகள்கள். வயதான அம்மா. மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டாள். இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறார். அதற்கு பார்வையற்ற முகம்மது தடையாக இருப்பானென்று நினைக்கிறார். பெண்பார்க்கப் போனபோது கூட தனது இரண்டு மகள்கள், என் அம்மா, நான் உங்கள் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்வோம் என்று தான் சொல்கிறார். முகம்மதுவை எப்படியாவது வீட்டை விட்டு எங்கேயாவது அனுப்பிவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

முகம்மதுவை வைத்து பாட்டிக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. பாட்டியும் தங்கைகளும் முகம்மதுவின் மீது மிகவும் பிரியம் கொண்டிருக்கிறார்கள்.

முகம்மதுவின் தங்கைகளுக்கு இன்னும் பள்ளி விடுமுறை தொடங்கவில்லை. அடம்பிடித்து அவர்களுடன் பள்ளி செல்கிறான். பார்வை திறனுடைய மாணவர்களைவிட நன்றாகப் படிக்கும் முகம்மதுவைக் கண்டு ஆசிரியர் வியக்கிறார். அவன் விருப்பப் பட்டால் தினமும் பள்ளிக்கு வரலாம் என்கிறார்.

பள்ளிக்கூட வாயிலில் நின்றிருக்கும் முகம்மதுவை அவனது தந்தை பார்த்து விடுகிறார். கடும் கோபத்துடன் வீட்டுக்கு வந்து அவனை ஏன் பள்ளிக்கு அனுப்பினாய் என பாட்டியுடன் சண்டை போடுகிறார். இவனை இங்கிருந்து அழைத்துப் போய் பார்வையற்ற தச்சன் ஒருவரது பட்டறையில் சேர்த்துவிடப்போவதாகவும் சொல்கிறார்.


ஒருநாள் முகம்மதுவை யாருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டுபோய் தச்சனிடம் உதவியாளராக சேர்த்து விட்டுவிடுகிறார்.

இதனால் பாட்டி மனமுடைந்து நோய்வாய்ப்படுகிறார். முகம்மதுவின் எதிர்காலத்திற்ககத்தான் இவ்வாறு செய்தேன் என தந்தை கூற பாட்டி உன் எதிர்காலத்திற்காகத்தான் இவ்வாறு செய்தாய் என்கிறார் பாட்டியின் உடல்நிலை மோசமாகிறது. முகம்மதுவை அழைத்து வரவா என்கிறார். பாட்டி பதில் சொல்லாமல் மௌனமாகவே இருக்கிறாள். ஒரு நாள் இறந்து விடுகிறாள். கேதத்திற்கு வந்த பெண்வீட்டார் விஷயம் அறிந்து கொள்கின்றனர். திருமணம் நின்று போகிறது.

மறுநாள் முகம்மதுவை அழைத்துவரப்போகிறார் தந்தை. வரும் வழியில் கடும் மழை. குதிரையில் அமர வைத்து பாலத்தின் வழியே அழைத்து வரும் போது பாலம் உடைந்து குதிரையுடன் முகம்மதுவும் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் விழுகிறான். முதலில் பேசாமல் நிற்கும் தந்தை பின் ஆற்றில் குதிக்கிறார். சீறிப்பாய்ந்தோடும் தண்ணீர் அவரை எங்கேயே அடித்துச்செல்கிறது.

மறுநாள் காலை கடல் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறார். பறவைகளின் சத்தம் கேட்டு முழித்தவர் தள்ளாடியடி ஓரிடத்தை நோக்கிப் போகிறவர். அங்கு முகம்மது ஒதுங்கிக் கிடக்கிறான். பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். இப்பொழுது முகம்மதுவின் கை மட்டும் அண்மையில் காட்டப்பட்டு அதில் சூரிய ஒளிக்கதிர்கள் நிறைகின்றன. அவன் கை விரல்கள் லேசாக அசைவதோடு படம் முடிவடைகிறது.

படம் முடிகையில் பார்வையற்ற முகம்மதுவை நினைத்து நம் கண்கள் நிறையும். ஒரு சமயத்தில் கூட்டிலிருந்து தவறி விழுந்த சிட்டுக்குருவிகள் இரண்டை தட்டுத்தடுமாறி மரமேறி கூட்டில் சேர்க்கும் முகம்மது கூடில்லாப் பறவையாக தவிக்கிறானே என நம் மனம் கலங்கும்.

இப்படத்தில் பாத்திரப்படைப்பு அற்புதமானது. தந்தையை ஒரேயடியாக கெட்டவனாக்காமல் ஒரு சமயம் நல்லவராய் ஒரு சமயம் கெட்டவரவாய் , ஒரு சமயம் அன்புகொண்டவராய் மறு சமயம் வெறுப்புற்றவராய் என ஒரு ஊசலாட்டம் கொண்ட யதார்த்த மனிதராகவே படைக்கப் பட்டிருக்கிறார்.

இறுதிக் காட்சியில் தந்தை முகம்மதுவை மடியில் வைத்துக் கொண்டு அழும்போது முகம்மது இறந்துவிட்டானோ என பதைபதைக்கும் மனம் அவன் கை விரல்கள் லேசாக ஆடிய பிறகு தான் ஆசுவாசம் அடையும்.

படத்தின் உரையாடல் ஒவ்வொன்றும் நம் மனதை நெகிழச்செய்யும்.

பார்வையற்றவர்களை கடவுளுக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆசிரியர் சொல்லும் போது.. மிகவும் பிடிக்குமென்றால் ஏன் பார்வையறவர்களாக படைக்க வேண்டும் என்று கேள்வியெழுப்புகிறான் முகம்மது. கைகளால் கடவுளை தொட்டு உணர முடியும் என்று ஆசிரியர் சமாதானம் செய்யும் போது நான் கைகள் கொண்டு கடவுளைக் கண்டறிவேன். அப்பொழுது என் துயரங்களையும், இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியங்களைக் கூட அவரிடம் சொல்வேன் என் முகம்மது அழுதபடி சொல்லும் போது நம் இதயம் உடைந்து விடும். முகம்மதுவை நினைத்து நம் உள்ளம் உருகும்.

பல விருதுகளையும் பெரும் பாராட்டையும் இந்த ஈரானியத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி.


                            சோட்ஸி

                                                        யுகன்



அன்பிற்கு ஏங்கும் மனம்

சோட்ஸி ஒரு இளம் கேங்க் லீடர் நான்கு பேர் கொண்டது அவனது குழு. ரயிலில் பயணியிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்கின்றனர். பயணி பணம் கொடுக்க மறுக்க குழுவில் ஒருவன் கத்தியால் குத்திவிடுகிறான். பயணி இறந்து விடுகிறார். பணத்தை எடுத்துக்கொண்டு இறங்கிவிடுகின்றனர். அச்சம்பவம் குறித்து குழுவில் டீச்சர் பாய் என்றழைக்கப்படுபவன் சோட்சியைக் கடுமையாகப் பேசுகிறான். கோபம் கொண்ட சோட்சி அவனைப் பலமாக அடிக்கிறான். பின் கோபத்துடன் வெளியேறுகிறான். மழையில் நனைந்தபடி சாலையில் போய்க்கொண்டிருக்கிறான்.
அப்போது ஒரு பெண்மணி காரை நிறுத்திவிட்டு கேட் கதவைத் திறக்கப் போன வேளையில் சட்டெனப்போய் காரை எடுக்கிறான். குறுக்கிட்ட அந்தப் பெண்மணியை சுட்டுவிட்டு காரில் விரைகிறான். காரில் போய்க் கொண்டிருக்கும் போது குழந்தை அழுகுரல் கேட்கிறது. அதன் பின்தான் காருடன் கைக் குழந்தையையும் கடத்திவிட்டோம் என்பதை உணர்கிறான். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு காரை ரோட்டில் விட்டுவிட்டு கிளம்ப முயல்கிறான். குழந்தையின் வீறிட்ட அழுகுரல் சத்தம் அவனைத் தடுக்கிறது.

சிறுவயதில் நோயில் படுத்த படுக்கையாய் கிடக்கும் தாய்.. தந்தையின் அன்பற்ற செயல் இவற்றால் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் வளந்ததை நினைத்துப்பார்க்கிறான். அது போன்ற நிலை குழந்தைக்கு வரக் கூடாதென்று நினைத்து குழந்தையைத் தூக்கிச்செல்கிறான். ஆனால் அவனால் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியவில்லை. அதே தெருவில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழ்பவள் மரியம். அவள் வீடு தேடிச் சென்று துப்பாக்கி முனையில் பால் கொடுக்கச் செய்கிறான்.

இன்னொரு முறை போகும் போது குழந்தை இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள். குழந்தையை மரியம் கொஞ்சும் போது தனக்கு இது போன்ற தாய்ப்பாசம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறான். கிளம்பும் போது இது என் குழந்தை ஜாக்கிரதை என்கிறான்.

குழந்தை அவனுடன் இருக்கும் அந்த குறுகிய நாட்களில் அவனது வாழ்க்கைமுறையே மாறிவிடுகிறது.


தன் குழுவில் இருக்கும் டீச்சர் பாயை தொடர்ந்து படிக்கவைப்பதற்காக பணம் திருடலாம் என முடிவெடுக்கின்றனர். சோட்சி குழந்தையின் வீட்டுக்குக் கூட்டி வருகிறான். குழந்தையின் அப்பாவை கட்டிப்போட்டிவிட்டு ஆளுக்கொரு திசையில் போகின்றனர்.
ஒரு அறைக்குள் நுழைந்த சோட்சி அங்கே நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கண்டு அக்குழந்தை எவ்வளவு வசதியுடன் வாழ்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறான். குழந்தையாக மாறி நெடுநேரம் அந்த அறையை ரசித்தபடி இருக்கிறான்.

பின் பணத்தைக் கொள்ளையடிக்காமல் குழந்தைக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான். அதைப்பார்க்கும் மற்றொருவன் நீ என்ன பைத்தியமா என்று திட்டுகிறான்.

கட்டிப்போடப்பட்டிருக்கும் குழந்தையின் அப்பா அலாரத்தை அழுத்துகிறார். கோபமடைந்த சோட்ஸியின் நண்பன் அவரைச் சுடப்போகிறான். அதற்குள் சோட்ஸி நண்பனைச் சுட்டு வீழ்த்துகிறான் குழந்தையின் தந்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்து தப்புகிறான்.

அன்று இரவு மரியம் வீட்டிற்கு வருகிறான். குழந்தை விசயம் எனக்குத் தெரியும் நியூஸ் பேப்பரில் பார்த்தேன் என்கிறாள். அக்குழந்தையைத் ஒப்படைத்துவிடு என்கிறாள். குழந்தையை ஒப்படைத்த பிறகும் நான் வீட்டுக்கு வரலாமா என்கிறான். மெளனமாக தலையசைக்கிறாள்.

குழந்தையை ஒப்படைக்கப் போகிறான். வாசலில் வைத்துவிடப்போக மனமில்லாமல் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு போகலாம் என்று காத்திருக்கும் அந்த சிறிய இடைவேளையில் அங்கே வந்த போலிசார் அவனைச் சுற்றி வளைக்கின்றனர். குழந்தையைக் கண்ணீர் மல்க ஒப்படைத்து விட்டு சரணடைகிறான்.

படத்தின் அதிரடியான பின்னணி இசை வியப்புக்குரியது.


தான் இழந்துவிட்ட இனிய குழந்தைப் பருவத்தை அந்தக் குழந்தையும் இழந்துவிடக் கூடாதென்ற சோட்சியின் அன்பிற்கு ஏங்கும் மனமே படத்தை உயர்வானதொரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது.

.2005இல் வெளிவந்த இந்த தென்னாப்பிரிக்கப் ப்டத்தின் இயக்குநர் கெவின் ஹீட். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இப்படம் வென்றிருக்கிறது.

லா ஸ்ட்ரடா

மிருகத்தினுள் விழித்தெழும் அன்பு

யுகன்

ஜம்பனோ மார்பில் இரும்புச் செயினைக் கட்டிக்கொண்டு மூச்சை  தம்  கட்டி உடைக்கும் வித்தை காட்டி பிழைப்பவன். தன்னிடம் உதவிக்கு  இருந்தவள்    இறந்து    போனதால் அவள் தங்கையை அழைத்துப் போக வருகிறான்.   அவள் பெயர் ஜெல்சோமினா.    வறுமையின் காரணமாக அவளின் விதவைத்தாய் 10000 லிராக்கள்  வாங்கிக் கொண்டு அவனுடன் அனுப்புகிறாள். ஜெல்சோமினா குழதைத்தனமானவள். வெகுளி. ஜம்பனோ முரடன். துளியும் அன்பற்றவன்.

அவளுக்கு ட்ரம்பெட், ட்ரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறான். சரியாக வாசிக்காததால் குச்சியால் பலமாக அடிக்கிறான். அன்று இரவு பலவந்  தமாக அவளை அடைகிறான்.

மறுநாள்   வேறொரு இடத்தில்   வித்தை காட்டுகின்றனர். நிறையப் பணம் வசூலாக ஹோட்டலுக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் ஜெல்சோமினாவை தெருவிலேயே விட்டு விட்டுப் போய்விடுகிறான். இரவு முழுவதும் வீதியிலேயே அமர்ந்திருக்கிறாள்.   காலையில் அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள்.  நீ என்ன   ‘ஸ்தீரி லோலனா என்று திட்டுகிறாள். நா ன் செய்யும் எதையும் கேள்வி கேட்காதே. வாயை மூடிக்கிட்டு இரு என்று எச்சரிக்கிறான். நா ட்கள் இப்படியே கழிகிறது.

இப்பொழுது அவன் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்கிறாள். முதலாளி அங்கேயிருக்கும் பபூனை அறிமுகம் செய்து வைக்கிறார். அவனைப் பார்த்ததும் ஜம்பனோ சட்டென முகம் திருப்பிக்கொள்கிறான். ஏற்கனவே ஒருவரையொருவர் ன்கு   அறிந்தவர்கள்.  அவன் தொடர்ந்து ஜம்பனோவை கேலி செய்து கொண்டிருக்கிறான்.    அவனின் தொடர் கேலியினால் ஒரு நாள்   ஜம்பனோ கத்தியை எடுத்து குத்தப் போகிறான். போலிஸ் வந்து அவனை கைது செய்கிறது.  

பபூன் ஜெல்சோமினாவிடம்   அவனோடு இராதே. அவன் முரடன் உன்னை எவ்வளவு கொடுமைப்படுத்டுகிறான் என்கிறான். நா ன் இல்லாட்டா யார் அவரைப் பார்த்துக் கொள்வது என்கிறாள்.  


 ஜெல்சோமினா மீண்டும் ஜம்பனோவோடு சேர்ந்து பயணம் செய்கிறாள். ஒரு நாள்   சாலையில் போய்க்   கொண்டிருக்கும் போது   பபூனை ஜம்பனோ பார்த்து விடுகிறான். அவனை அடிக்கிறான்.   இரும்பில் தலைமோதி பபூன் இறந்து விடுகிறான். அவன் காரிலே வைத்து பபூனை பள்ளத்தில்  உருட்டி விட்டு விட்டு அங்கிருந்து போய் விடுகிறான்.

ஆனால் அது முதல் ஜெல்சோமினா பபூன் இறந்ததைப் பற்றியே புலம்பிக்  கொண்டிருக்கிறாள். சாட்சியே   இல்லை. நீயாக  உளறி   என்னை மாட்டி விட்டு விடாதே என்கிறான் ஜெம்பனோ. அவள் தொடர்ந்து இது பற்றியே பேசிக் கொண்டிருக்க..   ஒரு நா ள் அவள் தூங்கும் போது விட்டு       விட்டுப்   போய்விடுகிறான்.

வருடங்கள் கடக்கின்றன. இப்பொழுது ஜம்பனோ வேறு ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இருக்கிறான். மாலை  வேளையில் கரத்திற்குள் உலாவும் போது ஜெல்சோமினா பாடும் பாட்டு கேட்டு அவ்விடத்திற்குப்     போகிறான். அப்பாடலை பாடிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் இந்தப் பாடல் எப்படித் தெரியுமென்று கேட்கிறான். அவள் நான்கு   வருடத்திற்கு முன்னால்  ஒரு பெண் கடற்கரையில்   தனியாக இருந்தாள். அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம். அவள்  எப்பொழுதும் இந்தப்    பாட்டைப் பாடிக் கொண்டிருப்பாள் என்கிறாள்.   அவள் இப்போது எங்கே என்று அவன் கேட்க இறந்து போய் விட்டதாகச் சொல்ல்கிறான்.

அன்று இரவு ன்றாகக் குடித்து விட்டு பாரில் இருந்தவர்களிடம்  சண்டை போடுகிறான். பின் கடற்கைரைக்கு வருகிறான். அவளை நினைத்தபடி வானத்தைப் பார்த்தவன் திடுமென  வெடித்து அழத் தொடங்குகிறான்.
வாழ்க்கையில் முதன் முறையாக அழுகிறான். அவளின் இழப்பை நினைத்து அவளின் அருமையை உணர்ந்து அழுது   கொண்டிருப்பதோடு படம் முடிகிறது.

ஜெம்பனோ அவளின் அருமை உணர்ந்து   அழும் காட்சி பார்வையாளர்களைக் கலங்க  வைக்கும். மிருகம் போன்ற அவனுக்குள்     அன்பு விழுத்தெழும்   அத்தருணம்   மகத்தானது.

ஜம்பனோவாக டித்த ஆண்டனி குயின்,   ஜெல்சோமினாவாக டித்த குலிட்டா மாசினா   இவர்களின் டிப்பு அற்புதமானது


ஆஸ்கார் உள்ளிட்ட 100 கணக்கான விருதுகளை வென்ற இந்த இத்தாலிய நாட்டுத்     திரைப்படம் 1956ஆம் ஆண்டு   வெளியானது இப்படத்தின் இயக்குனர் ஃபெலினி.

உலக சினிமா:

நோ மேன்ஸ் லேண்ட்

யுகன்


வெடிக்கக் காத்திருக்கும் கண்ணி வெடி

இருள் விலகட்டும் போஸ்னிய நாட்டு ராணுவ வீரர்கள் சிலர் ஓரிடத்தில் காத்திருக்கிறார்கள். விடிந்ததும்தான் தெரிகிறது தாங்கள் தவறான பாதையில் வந்து எதிரி நாட்டின் (செர்பியா) எல்லைக்கு அருகே வந்து விட்டோம் என்று. எதிரி நாட்டு வீரர்கள் சுடுகிறார்கள். பலர் சுடப்பட்டு விழுகிறார்கள். மீதப் போர் தப்பி ஓட பீரங்கித் தாக்குதல் நடத்துகின்றனர். சீராவும் சிக்கியும் தப்பித்து ஓடி ஒரு கால்வாயில் ஒளிகின்றனர். எதிரி நாட்டு வீரர்களான நினோவும் இன்னொருவனும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்க. கால்வாய் அருகே வருகின்றனர். சீரா படுகாயம் அடைந்து நகர முடியமல் படுத்துக் கிடக்கிறான். வீரர்களைப் பார்த்ததும் சிக்கி ஒளிந்து கொள்கிறான். வந்த வீரர்கள் அசைவின்றி மயங்கிக் கிடக்கும் சீராவைப் பார்க்கிறனர். பின் விளையாட்டைப் போல அவனைத் தூக்கி அவனுக்கு அடியில் கண்ணி வெடியை வைக்கின்றனர். இப்போது அவனை யாராவது தூக்கினால் கண்ணி வெடி வெடித்து 50 அடி தூரத்திற்கு எதுவுமே மிஞ்சாது என்று பேசிக்கொள்கின்றனர்.

ஒளிந்திருக்கும் சிக்கி துப்பாக்கியுடன் வெளிவந்து இருவரையும் சரமாரியாகச் சுடுகிறான். கண்ணிவெடி வைத்தவன் இறந்துவிடுகிறான். நினா காயத்துடன் விழுகிறான். இப்பொழுது அந்தக் கால்வயில் நினா, சிக்கி, கன்னிவெடிக்கு கீழே படுத்திருப்பவன் என மூன்று பேர்தான் இருக்கிறார்கள்.

சிக்கி, நினா இருவரும் ஒரு முடிவுக்கு வந்து பதுங்கு குழிக்கு மேலே வந்து வெள்ளை நிற பனியனை அசைத்துத் தங்களைக் காப்பாற்ற வரும்படி வேண்டுகோள் விடுகின்றனர்.

எல்லையின் இருபுறமும் இருக்கும் வீரர்கள் இதைப்பார்க்கிறார்கள் ஐ. நா. சபைக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள்.

ஐ.நா.வின் கவச வண்டி கால்வாயை நோக்கி வருகிறது சிக்கியும் நினோவும் மகிழ்கிறார்கள். ஐ.நா. வீரன் நீல் உதவி செய்ய நினைக்கையில் வயர்லெஸ்ஸில் மேலிடத்திலிருந்து ‘யாரோ இருவருக்காக ஐ.நா. படை வீரனை இழக்க முடியாது’ உடனே நீ திரும்ப வந்து விடு என்கிறார்கள்.

நீல் கிளம்பும் போது எதிரி நாட்டு வீரனான நினோவும் கிளம்ப சிக்கி அவனைக் காலில் சுடுகிறான்.

உதவி செய்ய வந்த நீலின் வாகனம் திரும்பிப் போவதை ஒரு தொலைக்காட்சிக் குழு பார்த்துவிடுகிறது. அவர்கள் அமைதிப்பேச்சு வார்த்தை நடப்பதால் அது பற்றி எல்லைப் பகுதியில் கருத்துக் கேட்க வந்தவர்கள். நீலிடம் வந்து நீங்கள் உங்கள் தலைமை அதிகாரியும் நீங்களும் வயர்லெஸ்சில் பேசியதைக் கேட்டோம் என்கிறார் ஒரு பெண் நிருபர். அந்த நிருபரை அதிகாரிகளுடன் பேசச் செய்கிறான் நீல். அவர்கள் நிரூபரை எங்கள் அலைவரிசையில் செய்தியை ஒட்டுக் கேட்டதே தவறு. முதலில் இங்கிருந்து போய்விடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். அதற்கு நிருபர் இந்தச் செய்தியை உடனடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப் போகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்கிறார். நிலைமை தீவிரமடைந்ததால் தலைமை அதிகாரி நீலை அங்கேயே இருக்கச் சொல்கிறார்.

அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே பல தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர்கள் கூடிவிடுகின்றனர். ஐ.நா. தலைமை அதிகாரிகளும் அங்கே வருகின்றார்கள்.

இதற்கிடையில் நினோ சிக்கி தன்னைச் சுட்டதற்கு பழிவாங்கும் விதமாக அவனைக் கத்தியால் குத்துகிறான். ஐ. நா. வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்து பிரிக்கின்றனர். கண்ணிவெடியின் கீழ் படுத்திருக்கும் சீரா இதையெல்லாம் பார்த்து ஏதும் செய்ய முடியாத நிலையை நினைத்து கலங்கியபடி அசையாமல் படுத்திருக்கிறான்.

கண்ணி வெடியை அகற்றும் முயற்சி நடக்கிறது. சிக்கி நினோ இருவரையும் வெளியேற்றுகின்றனர். இதுதான் சமயம் என்று சிக்கி கைத்துப்பாக்கியால் நினோவைச் சுடுகிறான். வீரர்கள் சிக்கியைச் சுட்டுவிடுகின்றனர். இப்பொழுது இருவரும் இறந்துவிடுகிறார்கள். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அந்த இடமே அமைதியாகிறது.

கண்ணி வெடியை எடுக்க முயற்சி செய்து பார்த்த நிபுணர் இனி மேல் அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது என்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் தலைமை அதிகாரியும் கேப்டனும் கூடிப் பேசி, கண்ணி வெடி அகற்றப்பட்டதாகவும் வீரன் சீரியஸாக இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்போவதாகவும் அறிவிக்கின்றனர்

இருட்டிய பிறகு அவ்விடத்தை விட்டுப் போவது கடினமென்பதால் அனைவரும் அவசர அவசரமாகக் கிளம்புகின்றனர். இப்போது அந்த இடத்தில் யாருமே இல்லை. சீரா மட்டும் தனியாகக் கண்ணி வெடியின் மேல் படுத்துக் கிடக்கிறான். மனதை உருக்கும் இசையுடன் படம் முடிவடைகிறது.

படம் முடியும் போது நிராதவின்றி கைவிட்டுச்செல்லப்பட்ட சீராவை நினைக்கையில் நம் இதயத்தை துயரம் சூழ்கிறது. போரின் அபத்தத்தை இரு நாட்டு வீரர்களை மையமாக வைத்து இயக்குநர் கூறுகிறார். கண்ணி வெடியை யார் வேண்டுமானாலும் இயக்கிவைத்து விடலாம். ஆனால் அவனே நினைத்தாலும் மீண்டும் அதை செயலிழக்கச் செய்ய முடியாது. போரைத் தொடங்குதல் எளிது ஆனால் அதன் விளைவுகள் மனித இனம் தாங்கிக்கொள்ள முடியாதது என்பதை இப்படம் வலுவாகச் சொல்கிறது.











இது போஸ்னிய நாட்டுத் திரைப்படம். 2001 ஆம் ஆண்டு வெளியானது. இதன் இயக்குநர் டேனிஸ் தனோவிக். சிறந்த திரைக்கதைக்காக கான் விருது, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என பல்வேறு விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

உலக சினிமா


ஸ்பிரிங்.. சம்மர்.. ஃபால்.. விண்டர்.. அண்டு ஸ்பிரிங்

வாழ்வின் பருவங்கள்

யுகன்

வசந்த காலம், கோடைக்காலம், குளிர் காலம் என ஐந்து பருவங்களை பின்னணியாகக் கொண்டு ஒரு புத்த மதத் துறவி ஒருவரின் வாழ்க்கையைக் கூறும் படம் இது.

முதலில் வசந்த காலம். முதிய துறவிக்கு உதவியாளராக இருக்கிறான் ஆறு வயதுச் சிறுவன். சுற்றி மலைகள் சூழ்ந்து ஏரியின் நடுவின் இருக்கிறது இவர்களது மடம். முதிய துறவிக்கு வேண்டிய மூலிகைகளைப் பறித்து வர வேண்டியது சிறுவனின் வேலை. ஒரு நாள் நீந்திக்கொண்டிருக்கும் மீனைப் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி மீண்டும் நீந்த விடுகிறான். மீன் தட்டுத் தடுமாறி நீந்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். இது போன்றே தவளைக்கும் பாம்புக்கும் செய்கிறான்.

இதை முதிய துறவி பார்த்துவிடுகிறார். மறுநாள் சிறுவன் தூங்கி எழும்போது அவன் முதுகில் கல் கட்டப்பட்டிருக்கிறது. சுமை பொறுக்க முடியவில்லை. இது போலத்தானே நீ கல் கட்டி விட்ட மீனுக்கும் இருக்கும். இப்படியே போய் நீ கட்டியதை அவிழ்த்துவிடு. எதாவது ஒன்று இறந்துவிட்டால் அதன் பாரத்தை நீ வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியதாகிவிடும் என்கிறார். பாறாங்கல்லைச் சுமந்தபடி போகிறான். தவளை தவிர மீதி இரண்டும் இறந்திருக்கின்றன. சிறுவன் அழுகிறான்.

இப்போது கோடைக்காலம். சிறுவன் இளைஞனாகிறான். அப்போது அவர்கள் மடத்திற்கு வைத்தியத்திற்காக ஒரு இளம் பெண்ணை அவள் அம்மா விட்டுச் செல்கிறாள். சில நாட்களிலேயே இளைஞன் அவள் மீது நாட்டம் கொள்கிறான். அது உடலுறவில் முடிகிறது. ஒரு நாள்  முதிய துறவி இதைப் பார்த்து விடுகிறார். அந்தப் பெண்ணிடம் உனக்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு என்கிறார். அவள் குணமாகியிருச்சு என்கிறாள். சரியான வைத்தியம்தான் செய்திருக்கிறான் என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்புகிறார். இளைஞன அவள் பிரிவால் துடிக்கிறாள்.

முதிய துறவி அவனிடம், ஆசை ஒரு பொருளை சொந்தமாக்கிக்கொள்ளச் சொல்கிறது, சொந்தமாக்கிக்கொண்ட பின் துன்பமே மிஞ்சும் என்கிறார். குருவின் பேச்சைக் கேளாமல் அவன் அவளைத் தேடி நகரத்திற்குச் செல்கிறான்.

இப்போது இலையுதிர்காலம். முதிய துறவி தனியாக வசிக்கிறார் இளைஞன் மடத்திற்கு வருகிறான். சீடனை மனைவியைக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்ய போலீசார் மடத்திற்கு வருகின்றனர். சீடன் போலிசாரை நோக்கிக் கத்தியை நீட்ட துறவி என்ன செய்கிறாய் என்று அதட்டி மனதை அமைதிப்படுத்தும் புத்த மத சூத்திரங்களை எழுதச் சொல்கிறார். அவன் எழுதி முடித்ததும் போலிசார் அவனைக் கூட்டிச்செல்கிறனர். முதிய துறவி தான் வாழ்நாளின் இறுதியில் இருப்பதை உணர்ந்து படகில் அமர்ந்து தன்னைத் தானே எரித்துக்கொள்கிறார்.

இப்போது குளிர்காலம் சிறைக்குச் சென்ற இளைய துறவி நடுத்தர வயது ஆளாக வருகிறான். தன் மனதையும் உடலையும் வலுப்படுத்தப் பல பயிற்சிகளைச் செய்கிறான். ஒரு நாள் இரவு முகம் முழுவதும் மூடிய பெண்மணி மடத்தில் வந்து குழந்தையை விட்டுச் செல்கிறாள். துறவி அவள் முகமூடியை அகற்ற முயல்கிறார். வேண்டாமென்று அவள் காலில் விழுகிறாள். அன்று இரவு மடத்தை விட்டு போகும் வழியில் உறைந்து கிடக்கும் குளத்தில் தவறி விழுந்து இறக்கிறாள்.

மறுநாள் அவளின் பிரேதத்தை துறவி பார்க்கிறார். இதுவரை தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக பெரும் பாறாங்கல்லை உடம்பில் கட்டிக்கொண்டு புத்தர் சிலையைக் கையில் வைத்துக்கொண்டு உயரமான மலை மீது ஏறுகிறார். புத்தர் சிலையை அங்கே வைத்து தியானம் செய்கிறார்.

இப்போது மறுபடியும் வசந்த காலம். அந்தப் பெண் விட்டுவிட்டுப் போன பையன் சீடனாவும் இளைஞன் நடுத்தர வயது கடந்த துறவியாகவும் இருக்கின்றனர். சிறுவன் ஒரு ஆமையைத் திரும்பிப் போட்டு அது தடுமாறுவதைக் கண்டு மகிழ்கிறான் படம் முடிகிறது.

இரண்டு  மணி நேரம் தியானம் செய்த உணர்வைத் தருகிறது இந்தப் படம். மனம் சாந்தமாகிறது. மலைகள் சூழ்ந்து ஏரியின் நடுவே இருக்கும் குடில் நமக்குள் பலவித எண்ணங்களைக் கிளறிவிடுகிறது. முதிய துறவியின் எப்போதும், எதற்கும் கலங்காத அமைதி நம்மை ஆட்கொள்கிறது. படம் பார்க்கும் அனுபவம் ஓர் ஆன்மிக அனுபவமாக மாறுகிறது.

கிம் கி துக் இயக்கிய இந்தத் தென் கொரியா நாட்டுப் படம் 2003இல் வெளியானது. உலகம் முழுவதும் பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றது.
தி 400 புளோஸ்

யுகன்.





வகுப்பறையில் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் தன் மேசையிலிருந்து ஒரு பெண்ணின் கவர்ச்சிப்படத்தை எடுத்து இன்னொருவனிடம் கொடுக்கிறான். அந்தப் படம் ஒவ்வொரு மேசையாக கடந்து வந்து அன்த்வானிடம் வருகிறது. அவன் பார்க்கும் போது ஆசிரியர் பார்த்து விடுகிறார். அவனை அழைத்து வகுப்பறையின் ஓரத்தில் நிற்கச் சொல்கிறார். அந்த வகுப்பு முடிந்த போதும் அங்கிருந்து நகரக்கூடாது என்கிறார். அன்த்வான் செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்று சுவரில் எழுதுகிறான். அதைப்பார்த்த ஆசிரியர் அதற்கும் அடிக்கிறார்.


மறுநாள் காலை தாமதமாக எழுந்தவன் அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்புகிறான். பள்ளிக்கு போகும் வழியில் நண்பன் ரெனேவைச் சந்திக்கிறான். இப்பவே லேட் ஆகியிருச்சு வாத்தியார் நம்மை உள்ளே விட மாட்டாரு பேசாம சினிமாவுக்குப் போய்விடலாம் என்று கிளம்புகின்றனர். படம் பார்த்த பின் ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர். அப்போது தன்னுடைய அம்மா இன்னொருவருடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துவிடுகிறான். அம்மாவும் இவனைப் பார்த்துவிடுகிறாள்.

அன்று இரவு அப்பா மட்டும் தனியாக வீட்டுக்கு வருகிறார். அவரே உணவு தயாரித்து அன்த்வானைச் சாப்பிடச் செய்கிறார். இரவு அது சம்பந்தமாக இருவருக்கும் சண்டை வருகிறது. அவனை உங்களால பார்த்துக்க முடியாட்டா பேசாம ஹாஸ்டல்ல சேர்த்திருங்க என்கிறாள். அந்த்வான் இதையெல்லாம் கேட்டபடியே படுத்திருக்கிறான். காலையில் அன்த்வான் பள்ளிக்குக் கிளம்பிய பிறகு அவனிடம் அடிவாங்கிய வகுப்புப் பையன் அவர்கள் வீட்டில் வந்து நேற்று பள்ளிக்குப் போகாத விசயத்தைச் சொல்லிவிடுகிறான். அப்பா கோபமடைகிறார்.

நேத்து பள்ளிக்கு வராததிற்கு என்ன பொய் சொல்லப் போற என்கிறார் ஆசிரியர். அம்மா செத்துட்டாங்க என்று சொல்கிறான். அதிர்ந்து போன ஆசிரியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி அமரவைக்கிறார். வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அவனது அம்மாவும் அப்பாவும் வருகின்றனர். அவனை ரெண்டு அறைவிடும் அப்பா நைட் வீட்டுக்கு வா உன்னைக் கவனிக்கிறேன் என்கிறார்.

வீட்டுக்குப்போனால் உதை கிடைக்கும் என்று பயந்து, நண்பன் உதவியுடன் அச்சகத்தில் தங்குகிறான். மறுநாள் வழக்கம் போல பள்ளி செல்கிறான். பள்ளிக்கு வரும் அம்மா அவனைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்கிறான்.

மறுநாள் வகுப்பில் சொந்த அனுவபத்தை வைத்து கட்டுரை எழுதச் சொல்கிறார் ஆசிரியர். அன்த்வான் தன்னைப் பாதித்த பால்சாக்கின் சில வரிகளையும் சேர்த்து எழுதுகிறான். இவ்வாறு தொடர்ந்து தவறு செய்வதால் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்கிறார். அவனுக்குப் பரிந்து பேசிய ரெனேவையும் வகுப்பை விட்டு வெளியேற்றுகிறார்.

இனிமேல் நான் வீட்டுக்குப்போனால் என்னை மிலிட்டரி ஸ்கூலில் சேர்த்திருவாங்க என்கிறான் அன்த்வான். ‘வா வந்து என் வீட்ல தங்கிக்க.. என்று கூறி அழைத்துச் செல்கிறான்.

ஒரு நாள் அன்த்வான் செலவுக்காக தன் அப்பாவின் அலுவலகத்திலிருக்கும் டைப்ரைட்டரைத் திருடி மாட்டிக்கொள்கிறான். அப்பா அன்த்வானை போலிஸ் ஸ்டேஷன் கூட்டிச் செல்கிறார். அவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கின்றனர்.

மறுநாள் அவனது அம்மா வருகிறாள். போலிஸ் அதிகாரி விடுமுறை நாட்களில் அவனைத் தனியாக விட்டுட்டுப் போவீங்களா என்கிறார். அம்மா ஆமாம் என்கிறாள். அத்துடன் அன்த்வான் பிறந்த பிறகு தான் இவரைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். அவர் அவனோட அப்பா இல்லை என்கிற விசயத்தையும் சொல்கிறாள்.

சிறைச்சாலையில் நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் அம்மா வருகிறாள். ‘இனி அப்பா உன் மேல எந்த அக்கறையும் எடுத்துக்க மாட்டாரு.. நீ இங்கேயே இரு’ என்கிறாள். அம்மாவின் அன்பற்ற பேச்சைக் கண்டு அன்த்வான் உறைந்து போகிறான்.

மறுநாள் அன்த்வான் தப்பிக்கிறான். காவலர்கள் அவனைத் துரத்துகின்றனர். அன்த்வான் தொடர்ந்து ஓடுகிறான். ஒரு கட்டத்தில் கடலை அடைகிறான். அதற்கு மேல் ஓட முடியாமல் நிலப்பரப்பை நோக்கித் திரும்புகிறான். திரும்பியவன் முகம் அதிர்ச்சியில் உறைவதோடு படம் முடிவடைகிறது.


படம் பார்த்து முடிகையில் அன்த்வானைப் போலவே நம் மனமும் அதிர்ச்சியில் உறைகிறது. செய்யாத தப்புக்கு தண்டணை அனுபவித்தல் என்பது அன்த்வானுக்கு தொடர்ந்து நடக்கிறது. அவனது அம்மா செய்த தவறால் தந்தை பெயர் தெரியாதவனாக உலகில் பிறந்தது தொடங்கி, வகுப்பறையில் ஆசிரியரிடம் தண்டனை எனத் தொடர்ந்து அது சிறைச்சாலையில் முடிகிறது.

பிரெஞ்ச் புதிய அலை சினிமாவில், மிக முக்கியமான இப்படம்.. 1959 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஃப்ரான்ஸ்வா த்ரூபோ. அவரின் இன்னல் மிகுந்த பால்யகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் இது.
பை சைக்கிள் தீஃப்.
யுகன்.

இரண்டாண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிச்சிக்கு அன்று போஸ்டர் ஒட்டும் வேலை கிடைக்கிறது. வேலைக்கு சைக்கிள் அவசியம். படுக்கை விரிப்புகளை விற்று அடமானம் வைத்த சைக்கிளை மீட்கின்றனர்.

முதல் நாள் வேலையைத் தொடங்குகிறார். சைக்கிளை சுவர் ஓரத்தில் சாய்த்து நிறுத்திவைத்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வரும் மூவர் சைக்கிளையும் ரிச்சியையும் பார்க்கின்றனர். பின் ஒருவன் சட்டென சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடுகிறான். ரிச்சி திருடன்.. திருடன் என்றபடி அவனைத் துரத்துகிறான். திருடனின் கூட்டாளிகள் ரிச்சியைத் திசை திருப்ப திருடன் தப்புகிறான். சைக்கிளைத் தொலைத்துவிட்டு கலங்கி நிற்கிறார் ரிச்சி.

போலிஸ் ஸ்டேஷனில் போய் புகார்க் கொடுக்கிறார். சரி கண்டு பிடிக்கிறோம் என்று கூறுகின்றனர். பின் தன் நண்பன் பையாக்கோவிடம் விஷயத்தைச் சொல்கிறார். இது மாதிரியான திருட்டு சைக்கிள்களை எல்லாம் பாகம் பாகமாக கழட்டி பியாஸா விட்டோரியா மார்க்கெட்டில் தான் விற்பார்கள். அதிகாலையில் போனால் சைக்கிளைக் கண்டு பிடித்துவிடலாம் என்கிறார் நண்பன்.

மறுநாள் மார்க்கெட்டிற்குப் போகின்றனர். அந்த மார்க்கெட்டில் தேடிக் கிடைக்காததால்.. அது போன்றிருக்கும் இன்னொரு மார்க்கெட்டிற்குப் போகின்றனர். அவர்கள் போன நேரம் கடும் மழை பெய்கிறது. மழையால் கடைகளை மூடத் துவங்குகின்றனர். தேடல் தடைபட ரிச்சி நிலை குலைந்து போகிறார். மழைக்காக ஒதுங்கியிருக்கும் அந்த நேரத்தில் திருடனைப் பார்க்கிறார். ஆனால் அவன் தப்பி விடுகிறான்.
அதே நாளில் இன்னொரு சமயம் திருடன் அவரிடம் மாட்டுகிறான். திருடின சைக்கிளை ஒழுங்காக் கொடுத்திரு என்கிறார். எனக்கொன்றும் தெரியாது என்கிறான் திருடன். திருடனுக்கு ஆதரவாகப் பலர் கூடுகின்றனர். திருடன் கையில் கிடைத்தும் சைக்கிளை அவரால் மீட்க முடியவில்லை.

நாள் முழுவதும் அலைந்த களைப்பில் ரிச்சியும் புரூனோவும் பிளாட்பார சுவரில் அமர்கின்றனர். கட்டிடத்தின் வாசலில் தனியாக நிற்கும் சைக்கிளைப் பார்க்கிறார். நெடுநேரத்திற்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவர் புரூனோவை வந்து கொண்டிருக்கிற ட்ராம் வண்டியில் ஏறிப்போய் ஓரிடத்தில் காத்திருக்கச்சொல்கிறார். புரூனோ ஏறுவதற்குள் ட்ராம் வண்டி கிளம்பி விடுகிறது.

அப்போது திருடன்.. விடாதே பிடி.. என்ற சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கும் புரூனோ தன் தந்தை சைக்கிளை ஓட்டிச் செல்வதையும் அவரைப் பலர் துரத்துவதையும் பார்த்துத் திகைத்துப் போகிறான்.

ரிச்சி மாட்டிக்கொள்கிறார். கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு நன்றாக அடிக்கிறது. புரூனோ அப்பா.. அப்பா.. என்று அழுகிறான். கூட்டத்தில் ஒருத்தர் இவனை போலிசில் ஒப்படைக்கனும் என்கிறார். சைக்கிளின் உரிமையாளர் இவனை இப்படியே விட்டுடலாம்.. போகட்டும் என்கிறார்.

கூட்டம் கலைகிறது. தன் மகனின் முன்னால் இவ்வாறு நடந்து கொண்டதை நினைத்து ரிச்சி விசும்புகிறார். புரூனோவும் அழுகிறான். பின் அவரின் கையை ஆறுதலாகப் பற்றுகிறான். கால்பந்தாட்டம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து ரிச்சியும் புரூனோவும் போகின்றனர். அங்கே படம் முடிகிறது.


சைக்கிளைத் திருட்டுக் கொடுத்த ரிச்சி பலவீனமான ஒரு தருணத்தில் இன்னொரு சைக்கிளை திருடி மாட்டிக் கொள்வது நம்மை கலங்கவைக்கிறது. தவறு செய்த தந்தையின் கையை மகன் புரூனோ ஆறுதலாகப் பற்றும் போது ரிச்சியுடன் சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய இத்தாலி நாட்டின் துயரநிலையை இப்படம் முகத்தில் அறையும் யதார்த்தத்துடன் சொல்கிறது.

நியோ ரியலிசப் படங்களில் தலை சிறந்த படமாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படம் 1948 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் விட்டோரியோ டி சிகா.

பரான்


 


 




காதல் மழை

லத்தீப் 17 வயது இளைஞன். ஒரு கட்டிடவேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்தில் அங்குள்ள பணியாளர்களுக்கு டீ சாப்பாடு என உணவு தயாரித்துக் கொடுப்பது அவன் வேலை. ஒரு நாள் நஜாப் என்னும் தொழிலாளி வேலை செய்யும் போது  கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து விடுகிறார். அவர் கால் முறிந்து விடுகிறது. அவரால் இனி வேலைக்கு வரமுடியாது என்பதால் அவருடைய மகன் வேலைக்கு வருகிறான். ஆனால் அவனால் கனமான சிமெண்ட் மூட்டையை தூக்க முடியாமல் கீழே போட்டு விடுகிறான். அதைப் பார்த்துவிடும், கட்டிடப் பணி  நிர்வாகி மெமார் திட்டுகிறார். பின் அவனுக்கு எளிதான உணவு தயாரிக்கும் வேலையைத் தந்துவிட்டு லத்தீப் கட்டிட வேலையைச் செய்யச் சொல்கிறார்.

இதனால் அந்தப் பையன் மீது லத்தீப் கடுங்கோபம் கொள்கிறான். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனைத் திட்டுகிறான்.
ஒருநாள் லத்தீப் கீழே போய்க்கொண்டிருக்கும் அந்தப் பையன் மீது மாடியில் இருந்து குழைத்த சிமெண்டை  ஊற்றுகிறான். அவன் ஒரு அறைக்குள் போய் தலையைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது லத்தீப் எதேச்சையாகப் பார்க்க அவன் பையனல்ல பெண் என்று தெரிந்து வியப்படைகிறான்.

அன்றிலிருந்து அவனுடைய சுபாவமே மாறிவிடுகிறது. அந்தக் கட்டிட வேலையில் நிறைய ஆப்கானிஸ்தான்காரர்கள் முறையான பெர்மிட் இல்லாமல் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். இதனால் அடிக்கடி அதிகாரிகள் இன்ஸ்பெக்‌ஷன் வருவார்கள். அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் தொழிலாளிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

அன்று இன்பெக்‌ஷன் வந்த போது அவள் அதிகாரிகளைப்பார்த்து ஒடுகிறாள். அதிகரிகள் துரத்துகின்றனர். லத்தீப் ஓடிப்போய் போலீஸ்காரர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான். இதற்காக மெமாரிடம் திட்டும் வாங்குகிறான்.

அதன் பின் அப்பெண் (அவள் பெயர் பரான்) வேலைக்கு வராமல் நின்றுவிடுகிறாள். அவள் இல்லாதது லத்தீப்பிற்கு ஏதோ செய்கிறது. அவளைத் தேடிப்போய் பார்க்கிறான். அவள் கல் சுமக்கும் கடுமையான வேலையைச் செய்துகொண்டிருக்கிறாள்.
பணத்திற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என   இதுவரைதான் சேர்த்து வைத்திருந்த பணத்தையெலாம் சுல்தான் என்பவரிடம்கொடுத்து பாரன் அப்பாவிடம் கொடுக்கச்சொல்கிறான். ஆனால் அவரோ அப்பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் போய் விடுகிறார். இன்னொரு முறை தன் இருப்பிற்க்கே முக்கியமான அடையாள அட்டையைக் விற்று கிடைத்த பணத்தையெல்லாம் அவரிடம் போய்க் கொடுக்கிறான். அவர் நன்றி சொல்கிறார். பின்னர் அவர்கள் மறுநாள் ஆப்கானிஸ்தான் போகிறார்கள். இது திரும்பமாட்டார்கள் என்று தெரிந்துகொள்கிறான். பலத்த மனப்போராட்டத்திற்குப் பின் சாந்தமான மனநிலைக்கு திரும்புகிறான்.

மறுநாள் அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது பொருட்களை வண்டியில் ஏற்ற உதவுகிறான். பரான் ஒரு பையை எடுத்துவரும் கீழே தவற விட்டு விடுகிறாள். பரான் அதைப் பொறுக்கி எடுக்கிறாள். லத்திப்பூம் உதவுகிறான். அப்போது அவளை நேருக்கு நேர் பார்க்கிறான். அவளும் பார்க்கிறாள். பையை எடுத்துக்கொண்டு அவள் கிளம்பும்போது முந்தைய நாள் பெய்தமழையில் அவள் ஷூ பதிந்து கொள்கிறது. அதை லத்தீப் எடுத்து விடுகிறான். வண்டி கிளம்புகிறது. லத்தீப் பரானைப் பார்த்தபடி இருக்கிறான். பரானும் இவனைப் பார்த்த படி போகிறாள். வண்டி போன பிறகு திரும்பும் லத்தீப் சேற்றில் அவள் காலடி தடம் புதைந்திருப்பதைப் பார்க்கிறான். அது ஒன்று தான் அவள் விட்டுச் சென்ற நினைவு. அதையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது மழை பெய்யத் தொடங்கி அந்த காலடிச் சுவடை  நிறைப்பதுடன் படம் முடிகிறது.

  ஒன்று சொல்லிக் கொள்ளாமல் பரான் லத்தீப்பை  பிரிந்து போகும் போது நம் இதயம் வேதனையால் சூழ்ந்தது போலாகிவிடும். லத்தீப்பின் காதல் அத்தனை ஆழமானது. பரான் தன் நினைவான விட்டுச் சென்ற அந்தக் கால்சுவட்டையும் மழைநீர் நிரப்பி துயரமான கவிதை போன்று முடிகையில் நாம் ஆழ்ந்த பெருமூச்சுவிடுவதை தவிர்க்கமுடியாது.

2001 ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு விருதுகளை வென்ற  இந்த ஈரானியத்  திரைப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி.

யுகன்